இவ்வளவு வளர்ச்சி திட்டங்களா? வடகிழக்கு மாநிலங்களில் பாஜக அரசு செய்தது என்ன..? ஓர் புள்ளிவிவரம்
டெல்லி:வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு பல ஆயிரம் கோடியில் மக்கள் நலத்திட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
வடகிழக்கு மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம், மாணவர் அமைப்பு எதிர்ப்பு என போராட்டங்கள் எழுந்தாலும் இதற்கு முன்பு எந்த மத்திய அரசும் செய்யாத பல திட்டங்களை மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு செய்திருக்கிறது. அதில் சில முக்கிய அம்சங்களை தற்போது காணலாம்.
முதலாவது திரிபுரா மாநிலம்... 2008ம் ஆண்டுக்கு முன்பாக திரிபுரா மாநிலத்தில் மீட்டர் கேஜ் ரயில்பாதை தான் இருந்தது. அதற்கு முன்பாக நாட்டின் மற்ற பகுதிகளை இணைக்கும் வகையில் எந்த ரயில் பாதையும் கிடையாது.
ரயில்பாதை திட்டங்கள்
மோடியின் அரசாங்கத்தில் தான் 900 கிலோ மீட்டருக்கு மீட்டர் கேஜ் ரயில்பாதையானது, அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அகர்தலா, டெல்லி இடையே ராஜ்தானி ரயில், திரிபுரா சுந்தரி எக்ஸ்பிரஸ் ரயில்சேவை தொடங்கப்பட்டது. 2016ம் ஆண்டில் அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு... 88 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2,315 கோடியில் தன்ஷிரி , கோஹிமா ரயில்பாதைக்கான அடிக்கல்லை நாட்டினார்.
புதிய ரயில்கள் அறிவிப்பு
இம்பால், அசோல் மற்றும் ஷில்லாங் பகுதிகளை இணைக்கும் ரயில் பாதைகளும் அமைக்கப்பட்டன. கிட்டத்தட்ட 24க்கும் மேற்பட்ட புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. திரிபுரா, சிட்டகாங் பகுதிகளுக்கு தேவையான ரயில் திட்டங்களில் வங்கதேசத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
சாலை போக்குவரத்து மேம்பாடு
ரயில்சேவையில் மட்டுமில்லாது... சாலை போக்குவரத்தும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 3.800 கி.மீ தொலைவுக்கு 32,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை திட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. 1,200 கி.மீ தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
60 ஆயிரம் கோடியில் திட்டங்கள்
அண்மையில், பிரதமர் மோடியும் 60 ஆயிரம் கோடியில் சிறப்பு தொகுப்புகளின் கீழ் சாலைகளை மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார். அவற்றில் 30 ஆயிரம் கோடியானது பாரத்மாலா திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் பணிகள் நடைபெற்றுவது தனி. அது தவிர... மேற்கு மேகலாயாவை, துரா நகரத்துடன் இணைக்கும் 271 கி.மீ தொலைவுக்கு இருவழிகளில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.
3,400 கோடி ஒதுக்கீடு
வான்வழி போக்குவரத்து மேம்பாட்டுக்கும் 3,400 கோடிக்கும் அதிகமான தொகையானது ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. அவற்றில் 934 கோடிக்கான பணிகள் நிறைவு பெற்றுவிட்டதாக அரசு தரப்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மின் உற்பத்தி திட்டங்கள்
மேலும், ஆண்டுக்கு 251 மில்லியன் யூனிட் மின்சாரதை உற்பத்தி செய்யும் ஹைட்ரோ பவர் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா, மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளை இணைக்கும் 3 வழிச்சாலையானது... கிட்டத்தட்ட 1360 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
பட்ஜெட்டில் அறிவிப்பு
2020ம் ஆண்டுக்குள் இந்த திட்டம் நிறைவு பெற்றுவிடும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.2018-19ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அந்த மாநிலத்தின் முக்கிய வளமான மூங்கிலை கொண்டு வர்த்தக ரீதியாக லாபத்தை மக்களுக்கு கொண்டு செல்வது குறித்தும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது.