பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்த மோடி.. உடனே ஓகே சொன்ன ரஜினி
சென்னை: பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து அவர் விழாவுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து ஆட்சி அமைக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் உரிமை கோரியது.
இதையடுத்து வரும் 30-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றுக் கொள்கிறார். இதற்காக அவர் சார்பில் முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு நண்பர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். நட்பு அடிப்படையில் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதையேற்று ரஜினியும் வருவதாக தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் மோடியின் பாஜக வெற்றி பெற்றவுடன் மோடிக்கு ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதில் மக்களவை தேர்தலில் நீங்கள் சாதித்து விட்டீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துகள், கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என வாழ்த்தியிருந்தார்.
கடந்த மக்களவை தேர்தலின் போது தமிழகத்துக்கு பிரதமர் வேட்பாளராக வந்த நரேந்திர மோடி, சென்னையில் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் அவரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அது போல் கமல்ஹாசனுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அந்த விழாவில் கலந்து கொள்வது குறித்து கமல் இன்னும் முடிவு செய்யவில்லை.