தனியார் நிறுவனங்களை செழிக்க வைக்கவே மோடி வெளிநாடுகளுக்கு பயணம்.. சித்து குற்றச்சாட்டு
டெல்லி: இந்திய பிரதமரான மோடி தொழிலதிபர்கள் அம்பானி, அதானி ஆகியோரின் தொழில் வளர்ச்சி மேலாளராகவா உள்ளார் என பஞ்சாப் மாநில அமைச்சரான நவ்ஜோத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அரசியல்வாதியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து, நான் இந்த தேசத்தின் காவலன் என பிரதமர் மார்தட்டி கொள்கிறார். ஆனால் பிரதமர்பெரும்பணக்காரர்களின் வீட்டு வாசலுக்கு சென்று காவல் காப்பதையே, தனது பணியாக செய்து வருகிறார். நாட்டு நலன்கள் சார்ந்த 55 வெளிநாட்டு பயணங்களின் போது அனில் அம்பானி, கவுதம் அதானி ஆகியோரை அழைத்துச் சென்றுள்ளார் பிரதமர்.
இந்த பயணங்களில் உடன் வந்த பெரும் பணக்காரர்களுக்காக, பல்வேறு தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக மோடி உதவி புரிந்துள்ளார். இதில் 18 ராணுவம் தொடர்பான ஒப்பந்தங்களும் உள்ளன. ரஷ்ய நாட்டுக்கு மோடி சென்ற போது அங்கு 6 பில்லியன் டாலர் அமெரிக்க ஒப்பந்தம் பெறப்பட்டது.
இந்தப் பயணத்தின்போது அனில் அம்பானியும் பிரதமருடன் சென்றார். இந்த 6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் அனில் அம்பானிக்காக பெறப்பட்டது. அப்போது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் ரூ. 7500 கோடி கடன் வைத்திருந்தது. இப்படி இந்த அளவுக்கு கடன் வைத்திருந்த ஒரு நிறுவனத்திற்கு இந்திய பிரதமரே ஒப்பந்தம் பெற்று கொடுத்துள்ளார் என சாடினார்.
இதே போல மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்றபோது அங்கு ரூ30 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் அனில் அம்பானியின் நிறுவனத்தை இந்திய அரசு நிறுவனத்தோடு பங்குதாரராக மாற்றினார் மோடி.
36 போர் விமானங்கள் வாங்க வேண்டிய இடத்தில் வெறும் 18 விமானங்களை அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. இப்படி அதிக தொகை கொடுத்து வாங்கப்படுள்ளதற்கு பிரதமர் பதில் கூறுவாரா என்று கேள்வி எழுப்பினார் சித்து. தன்னை ஒரு சவுகிதார், தேசபக்தர் என்றெல்லாம் கூறிக்கொள்ளும் மோடி பொதுத் துறை நிறுவனங்களை சிதைத்து, தனியார் நிறுவனங்களை வளர்த்து வருவதே உண்மை. தனியார் நிறுவனங்களுக்காக நாடு நாடாக சென்று ஒப்பந்தங்களை வாங்கி அவற்றை செழிக்க வைக்கிறார்.
திரும்பிக் கூட பார்க்காத படேல் சமூகம்.. பரிதவிப்பில் குஜராத் பாஜக.. மோடி மேஜிக் வீணாகுமா!
ரிலையன்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி லாபம் ஈட்டுகிறது. ஆனால் மறுபக்கம் பெல், பி,எஸ்,என்,எல், என்.டி.பி.சி ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. தேசபக்தர் என்று கூறிக்கொள்ளும் சவுகிதார் மோடி இந்த நாட்டுக்கு பிரதமரா அல்லது அம்பானி, அதானி போன்றோருக்கு தொழில் வளர்ச்சி மேலாளரா என்பதை தெளிவுபடுத்திவிட்டால் நன்றாக இருக்கும் என்றார்.