பிரதமராக யார் வர விருப்பம்?.. மேற்கு வங்க மக்களின் சாய்ஸ் இவர்தான்.. பரபர சர்வே முடிவுகள்
டெல்லி: பிரதமராக யார் வர விருப்பம் என மேற்கு வங்க மக்களிடம் கேட்டபோது அவர்களின் முதல் சாய்ஸ் நரேந்திர மோடிதான் என நியூஸ் நேஷன் சர்வே தெரிவித்துள்ளது.
அதிக லோக்சபா தொகுதிகளை கொண்ட மாநிலங்களில் மேற்கு வங்கம் 3-ஆவது இடம் பிடித்துள்ளால் முக்கிய மாநிலமாகும். இதனால் மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் நியூஸ் சர்வே மக்களின் கருத்துகளை கேட்டது.
அதில் பிரதமராக யார் பதவி வகிக்க விருப்பம் என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பாஜகவின் நரேந்திரமோடியே வரும் தேர்தலிலும் பிரதமராக வர வேண்டும் என 31 சதவீதம் மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அது போல் பிரதமர் ரேஸில் இரண்டாவது இடத்தில் உள்ள ராகுல்காந்திக்கு 17 சதவீதம் பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த இருவர் அல்லாது மற்றவர்கள் பிரதமராக வர 29 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தில் முக்கியமான விவகாரங்கள் என்னென்ன என மக்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அடிப்படை உள்கட்டமைப்பு என 19 சதவீதம் பேரும், வேலையின்மை என 17 சதவீதம் பேரும், பணவீக்கம் என 12 சதவீதம் பேரும், நக்ஸலிசம் என 11 சதவீதம் பேரும், ஊழல் என 9 சதவீதம் பேரும், சட்டவிரோத ஊடுருவுபவர்கள் என 7 சதவீதம் பேரும், நிலையான அரசு என 5 சதவீதம் பேரும் கம்யூனலிசம் என 4 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
42 மக்களவை தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 31 இடங்களில் வெற்றி பெறும். பாஜகவோ 7 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் இடது சாரிகள் 2 இடங்களிலும் வெற்றி பெறும் என கூறப்படுகிறது.