ராஜீவை விடுங்க.. விமானப்படை விமானத்துக்கு 744 ரூபாய்தான் தந்தீங்க மோடி.. பாயின்ட் பிடித்த காங்.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இந்திய விமானப்படை விமானத்தை சொந்த டாக்ஸி போல பயன்படுத்தியதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலை தனது இன்ப சுற்றுலாவுக்கு பயன்படுத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று குற்றம்சாட்டி பேசியிருந்தார்.
இதற்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா இன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஊடகத்தில் வெளியான ஒரு செய்தி அடிப்படையில் ரந்தீப் சுர்ஜேவாலா டெல்லியில் இன்று நிருபர்களிடம் இந்த தகவலை தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய ராஜீவ் காந்தியின் ஐ.என்.எஸ். விராத் போர்க்கப்பல் விவகாரம்.. அன்று என்னதான் நடந்தது?
தேர்தல் பிரச்சாரங்களுக்காக இந்திய விமானப்படையின் ஜெட் விமானத்தை மோடி பயன்படுத்தியதும், அதற்கு வெறும் 744 ரூபாய் மட்டுமே வாடகையாக கொடுத்ததும் அம்பலமாகி உள்ளதாக கூறிய அவர், இதன்மூலம் டாக்ஸியை போல இந்திய விமானப்படை விமானத்தை மோடி பயன்படுத்தியுள்ளது அம்பலமாகி உள்ளது என்று தெரிவித்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இந்த தகவல் கிடைக்கப் பெற்றதாக ஊடகமொன்றில் இன்று, இதுபற்றிய, செய்தி வெளியாகி இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல், இவ்வாண்டு ஜனவரி மாதம் வரை அவர், சொந்த பயன்பாடுகளுக்காக, பயன்படுத்திய, இந்திய விமானப்படை, விமான சேவைகளுக்கு, பாஜக சார்பில் ரூ.1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
மொத்தம் 240 அலுவலக ரீதியில் அல்லாத, உள்நாட்டு பயணங்களுக்கு இந்த பணம் செலுத்தப்பட்டுள்ளது. சில பயணங்களுக்கு மிகக் குறைவாக பணம் செலுத்தப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி மோடி பயன்படுத்திய விமான படை விமானத்திற்கான கட்டணமாக பாஜக 744 ரூபாய் மட்டுமே செலுத்தி உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கிடைத்ததாக அந்த செய்தி கூறியிருந்தது.
ராஜீவ்காந்தி தொடர்பாக போர்க்கப்பல் சர்ச்சையை பிரதமர் நரேந்திர மோடி துவக்கிய நிலையில், இப்போது விமானப்படை, விமான சர்ச்சை அவருக்கு எதிராகவே திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.