வலிமையான ஜனநாயகத்தில்....உலகத்துக்கே நாம்தான் முன்னுதாரணம்...பிரதமர் மோடி பெருமிதம்!
டெல்லி: மேட் இன் இந்தியா, கொரோனா தடுப்பூசிகள் மூலம் மனித நேயத்தை காக்க இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை இந்தியா சவாலாக எதிர்கொண்டபோது, உலக நாடுகளும் அதனை தைரியத்துடன் எதிர்கொண்டன என்று பிரதமர் மோடி கூறினார்.
துடிப்பான மற்றும் வலிமையான ஜனநாயகத்திற்கு உலகத்துக்கே முன்னுதாரணமாக இந்தியா உள்ளது எனவும் அவர் பெருமையுடன் தெரிவித்தார்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி
பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனாவின் தொடக்க காலத்தில் நாம் பிபிஇ கிட்கள், மாஸ்க்குகள், வென்டிலேட்டர்கள் ஆகியவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தோம். ஆனால் இன்று நாம் தன்னம்பிக்கையுடன் சாதித்து உள்ளோம்.
நாம் கொடுத்த தைரியம்
மேட் இன் இந்தியா, கொரோனா தடுப்பூசிகள் மூலம் மனித நேயத்தை காக்க இந்தியா தயாராக உள்ளது. கொரோனா ஒழிப்பில் நமது நாடு முன்னிலையில் உள்ளது. இறப்பு விகிதம் இங்கு குறைவாக உள்ளது. பயங்கரவாதத்தை இந்தியா சவாலாக எதிர்கொண்ட போது, உலக நாடுகளும் தைரியத்துடன் அதனை எதிர்கொண்டன.
முதல் இடம் நாம்தான்
இன்று ஊழலை தொழில்நுட்பம் மூலம் நாம் ஒழித்து வருகிறோம். பல கோடிக்கணக்கான ஏழைகளின் வங்கிக்கணக்கில் பணம் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. இந்தியாவில் ஜனநாயகம் சாத்தியமில்லை. அது தகர்க்கப்படும் என சிலர் கூறினர். ஆனால் இன்று உண்மையில், துடிப்பான மற்றும் வலிமையான ஜனநாயகத்திற்கு முன்னுதாரணமாக இந்தியா உள்ளது.
நம்பிக்கை வலுவாகியுள்ளது
கடந்த ஆண்டு கொரோனா நெருக்கடி ஏற்பட்டபோது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நாட்டுக்கும், உலகம் எங்கும் ஆற்றிய பங்கு பாராட்டத்தக்கது. இதுதான் நமது பாரம்பரியம். நமது மண்ணின் கலாச்சாரம். சமூக மற்றும் அரசியல் தலைமை அடிப்படையில் இந்தியர்கள் மீதான உலக நம்பிக்கை மேலும் வலுபெற்றுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.