பிரதமர் மோடியின் 'வாவ்' ஐடியா.. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு.. அப்படி என்ன சொன்னாரு?
டெல்லி: கொரோனா மேலாண்மை கூட்டத்தில் பிரதமர் மோடியின் பரிந்துரைகளுக்கு பாகிஸ்தான் உட்பட அனைத்து நாடுகளும் ஒருசேர ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தியா உற்பத்தி செய்த கொரோனா தடுப்பூசியை உலகத்தில் பல நாடுகள் வாங்கி உபயோகித்து வருகின்றன. இதுவரை 2.29 கோடி தடுப்பு மருந்துகளை இந்தியா விநியோகம் செய்துள்ளது.
அதேபோல், ஆப்பிரிக்க நாடுகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் பசிபிக் தீவு நாடுகளுக்கும் இந்தியா கொரோனா தடுப்பூசிகளை அளிக்க உள்ளது. இந்நிலையில், 'கோவிட்-19 மேலாண்மை: அனுபவம், நல்ல பழக்கங்கள் மற்றும் முன்னெடுப்பு நடவடிக்கை' (Covid-19 Management: Experience, Good Practices and Way Forward) என்ற தலைப்பிலான கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதில், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவு, மொரீஷியஸ், நேபாளம், பாகிஸ்தான், சீஷெல்ஸ், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் சுகாதார அதிகாரிகள், வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.
ஒன்று சேர்ந்தோம்
இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "இன்று நமது நாடும், உலகமும் கொரோனா தடுப்பூசிகளை விரைவாக பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. இதில், நாம் அதே கூட்டுறவு மற்றும் ஒத்துழைப்பு மனப்பான்மையை பராமரிக்க வேண்டும். கடந்த ஆண்டு கோவிட் -19 உலகைத் தாக்கியபோது, எங்கள் நாட்டில் இருக்கும் அதிக மக்கள் தொகை குறித்து கவலை தெரிவித்தனர். ஆனால், ஆரம்பத்திலிருந்தே நாங்கள் அனைவரும் இந்த சவாலை ஒருங்கிணைந்து எதிர்கொண்டோம். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், இந்த அச்சுறுத்தலை எதிர்கொண்டு, ஒற்றுமையாக எதிர்த்து போராடி வந்திருக்கிறோம். எங்கள் ஒற்றுமையை பார்த்து பல நாடுகள் அதனை பின்பற்றத் தொடங்கின.
மகத்தான பங்களிப்பு
தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான உடனடி செலவுகளைச் சமாளிக்க கோவிட் -19 அவசரகால நிதியை நாம் உருவாக்கியுள்ளோம். மருந்துகள், பிபிஇக்கள் மற்றும் சோதனை உபகரணங்கள் மற்றும் நமது வளங்களை பகிர்ந்து கொண்டோம். எல்லாவற்றிற்கும் மேலாக, கூட்டுப் பயிற்சி மூலம் நமது சுகாதார ஊழியர்களின் மதிப்புமிக்க பொருள், அறிவை பகிர்ந்து கொண்டோம். வெபினார்கள், ஆன்லைன் படிப்புகள் மற்றும் ஐடி போர்ட்டல்கள் மூலம், நாம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம், சோதனை, தொற்று கட்டுப்பாடு மற்றும் மருத்துவ கழிவு மேலாண்மை ஆகியவற்றில் ஒருவருக்கொருவர் சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொண்டோம். இந்த அறிவையும் அனுபவத்தையும் திரட்டுவதற்கு நாம் ஒவ்வொருவரும் மகத்தான பங்களிப்பை வழங்கினோம்.
சிறப்பு விசா
கடந்த வருடத்தில், நமது சுகாதார ஒத்துழைப்பு மூலம் நிறைய சாதித்துள்ளோம். நம்முடைய லட்சியத்தை மேலும் உயர்த்துவது பற்றி இப்போது சிந்திக்க முடியுமா? அதற்காக சில விஷயங்களை பரிந்துரை செய்ய என்னை அனுமதிக்கவும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்காக ஒரு சிறப்பு விசா திட்டத்தை உருவாக்குவது குறித்து நாம் பரிசீலிக்க முடியுமா? இதனால் அவர்கள் அவசர காலங்களில், மற்ற நாடுகளின் வேண்டுகோளின் பேரில் அங்கு விரைவாக பயணிக்க முடியும். அதேபோல், நம்முடைய விமான போக்குவரத்து அமைச்சகங்கள், மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான மண்டல ஏர் ஆம்புலன்ஸ் ஒப்பந்தத்தினை ஒருங்கிணைக்க முடியுமா?
பாகிஸ்தான் ஆதரவு
குறிப்பாக, வருங்காலத்தில் ஏற்பட கூடிய பெருந்தொற்றுகளை முன்பே தடுக்கும் வகையில், தொழில் நுட்பம் உதவியுடன் கூடிய தொற்றியலை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மண்டல நெட்வொர்க்கை உருவாக்க முடியுமா?" என்றும் அவர் கேட்டு கொண்டார். இதுபோன்று பிரதமர் மோடி முன்வைத்த ஆலோசனைகளுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஆதரவு அளித்தன. இந்த திட்ட ஆலோசனைகளை முன்னெடுத்து செல்லும் வகையில், விவாதம் ஒன்றும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடுகள் முன்மொழிந்தன.