2வது முறையாக 30 ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார் மோடி: ஜனாதிபதி அதிகாரப்பூர்வ தகவல்!
டெல்லி: நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் மோடி நாட்டின் பிரதமராக மீண்டும் பதவியேற்கிறார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக 350தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற என்டிஏ கூட்டத்தில் மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி குடியரசுத் தலைவரிடம் ஆட்சியமைக்க உரிமை கூறினார். இந்நிலையில் வரும் 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பதவியேற்பார் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியுடன் அவரது அமைச்சரவையும் பதவியேற்கும் என தெரிகிறது. மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை உட்பட பல்வேறு நாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.