மீண்டும் மோடி... அன்று.. முலாயம்சிங் சொன்ன அந்த ‘வாழ்த்து’ பலிக்கிறதா?
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் நிலையில் அரசியல் ஆடுபுலி ஆட்டங்கள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.
லோக்சபா தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வெளியாகி உள்ளன. 14 கருத்து கணிப்புகளில் 12 பாஜகவே நிச்சயம் ஆட்சி அமைக்கும் என அடித்துச் சொல்கின்றன.
அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. லோக்சபா தேர்தல் களத்தில் பாஜகவை வீழ்த்த கரம் கோர்த்தவர்கள், எக்ஸிட் போல் முடிவுகளைத் தொடர்ந்து ஊசலாட்டத்தை வெளிப்படுத்த தொடங்கிவிட்டனர்.
பாஜக ஆட்சி அமைக்க முயற்சித்தால் நேற்று வரை எதிரிகளாக இருந்தவர்கள் 'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என கூறிக் கொண்டு கை கோர்க்க வாய்ப்பிருக்கிறது. இதற்கான சமிக்ஞைகள் ஒவ்வொன்றாக வெளிப்பட தொடங்கி இருக்கிறது.
கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, நீங்கள் மீண்டும் பிரதமராக வாழ்த்துகிறேன் என சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம்சிங் யாதவ் மோடியை வாழ்த்தினர். பிரதமர் மோடியும் இருகரம் கூப்பி தலைவணங்கி அந்த வாழ்த்தை ஏற்றுக் கொண்டார்.
சொத்து குவிப்பு வழக்கு- முலாயம் சிங், அகிலேஷுக்கு எதிராக ஆதாரம் இல்லை- சிபிஐ
ஆனால் தேர்தல் களத்தில் பாஜகவை வீழ்த்த மாயாவதியுடன் கை கோர்த்தார் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ். தற்போதைய கள சூழலில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்பட அகிலேஷ் மற்றும் மாயாவதி இருவரும் திடீரென தயக்கத்தை காட்டுகின்றனர்.
இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் திடீரென சிபிஐ, முலாயம்சிங் யாதவின் குடும்பத்துக்கு எதிராக ஆதாரம் இல்லை என ஒரு பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்குள் இன்னமும் எத்தனை 'நாடகங்கள்' அரங்கேறுமோ?