ஒடிஷா புயல் பாதிப்பு.. உடனே கிளம்பிச் செல்கிறார் பிரதமர் மோடி!
Recommended Video
டெல்லி: கஜா புயலால் காவிரி டெல்டா பகுதி சீர்குலைந்து பரிதவித்து நின்றபோது பார்வையிட வராத பிரதமர் நரேந்திர மோடி, தற்போது ஒடிஷா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட உடனடியாக கிளம்பிச் செல்கிறார்.
ஒடிஷா, மேற்கு வங்க மாநிலங்களில் ஃபனி புயல் கடும் சீரழிவை ஏற்படுத்தியுள்ளது. மிகப் பெரிய பொருட் சேதத்தை ஃபனி புயல் ஏற்படுத்தியுள்ளது. அதி தீவிர புயலாக அது ஒடிஷாவை தாக்கியதால் சேதமும் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் ஒடிஷா மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அத்தோடு நில்லாமல் அவர் நேரடியாக ஒடிஷா மாநிலத்திற்கு வருகிற திங்கள்கிழமை புறப்பட்டுச் செல்கிறார். புயல் பாதித்த பகுதிகளை அவர் பார்வையிடவுள்ளார். இதை அவரே டிவீட் மூலம் கூறியுள்ளார்.
|
ஒடிஷா செல்கிறார் மோடி
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், 6ம் தேதி காலை நான் ஒடிஷா செல்கிறேன். அங்கு ஃபனி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
கஜாவுக்கு வரலை
தமிழகத்தில் ஒக்கி, கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டபோது மத்திய, மாநில அரசுகள் மக்களின் கடும் கோபத்தை சந்தித்தன. காரணம், இரு அரசுகளும் தேவையான உதவிகளைச் செய்யவில்லை என்ற புகார் எழுந்தது. அதேபோல வர்தா உள்ளிட்ட முந்தைய புயல்களின் இழப்பு இதுவரை நேர் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
|
பரிதாபத்துக்குரிய காவிரி டெல்டா
கஜா புயல் காவிரி டெல்டாவைத் தாக்கியபோது பிரதமர் மோடி நேரில் வரவில்லை. ஆய்வு செய்யவில்லை. ஹெலிகாப்டரில் கூட வந்து பார்க்கவில்லை. இந்த வருத்தம், ஏமாற்றம், ஆதங்கம், கோபம் இன்னும் காவிரி டெல்டா மக்களிடம் உள்ளது.
நல்லது நடக்கட்டும்
இந்த நிலையில் ஒடிஷாவில் ஃபனி புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி உடனடியாக செல்வது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. இந்த மக்களுக்காவது மத்திய அரசு விரைந்து நிவாரணம் வழங்கினால் மகிழ்ச்சிதான்.