ராகுல் காந்தி இந்த கூட்டணியை உறுதி செய்தால் போதும்.. மோடியை வீழ்த்த முடியும்.. இந்தியா டுடே சர்வே
டெல்லி: காங்கிரஸ் கட்சி வலுவான கூட்டணி அமைத்தால் வரும் லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று இந்தியா டுடே டிவி சேனல் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
வரும் லோக்சபா தேர்தலையொட்டி தற்போது நாட்டில் மும்முனை போட்டி நிலவுகிறது. ஒருபக்கம் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், மற்றொரு பக்கம் மமதா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனி கூட்டணிகளாகவும் களம் காணப் போவது தான் தற்போதைய கள நிலவரமாக உள்ளது.
ஆனால், காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய மூன்று காட்சிகளையும் காங்கிரஸ் கட்சி தன்னுடைய கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட்டால், பாஜக கூட்டணி 219 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடியும் என்று இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
நாடு முழுக்க மொத்தம் 13 ஆயிரத்து 179 பேரிடம் எடுக்கப்பட்ட இந்த கருத்து கணிப்பு முடிவில் இந்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் காங்கிரஸ் தலைமையிலான இந்த பிரமாண்ட கூட்டணி 269 தொகுதிகளை வெல்லக்கூடும் என்றும் 55 தொகுதிகளை பிற கட்சிகள் கைப்பற்றலாம் என்றும் இந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
இதன்மூலம் அறுதிப் பெரும்பான்மையை பிடிக்க முடியாவிட்டாலும் தனிப்பெரும்பான்மை பெறும் கூட்டணியாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உருவெடுக்கும். அப்போது இயல்பாகவே பிற கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என்று இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.