எதிர்க்கட்சிகளின் தவறுகள்.. மொத்த வித்தைகளையும் காட்டிய மோடி-அமித்ஷா.. மாறிய தேர்தல் கணிப்புகள்
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடியும், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் இந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டதும், எதிர்க்கட்சிகள் செய்த சில தவறும் தான் தேர்தல் கருத்துக்கணிப்புகள் முடிவுகளை பிரதிபலிக்கிறது
மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 6 கட்டங்களாக நடந்தது. இதில் பாஜக ஒரு அணியாகவும், காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. மாநில கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.
இதில் மற்ற கட்சிகளையும் தாண்டி வெற்றிக்காக பல சமரசங்களை செய்து கொண்ட பாஜக, அதற்காக மிக கடுமையான முயற்சிகளை செய்திருக்கிறது.
இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாதுப்பா.. டெலிகேட் பொஷிஷனில் ஸ்டாலின், எடப்பாடி
வளர்ச்சி நாயகன்
கடந்த 2014ம் ஆண்டு காங்கிரஸ் மீதான அதிருப்தி மற்றும் மோடியின் குஜராத் மாடல் ஆகிவற்றை காண்பித்து ஓட்டு கேட்டது. அப்போது மோடி ஊர் ஊராக போய் தன்னை வளர்ச்சியின் நாயகனாக காண்பித்தார். மேலும் தான் வந்தால் கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவருவேன் என்றும் வாக்குறுதி அளித்தார். வளர்ச்சி நாயகன், கருப்பு பண மீட்பு இந்த இரண்டும் மோடிக்கான இமேஜை உருவாக்கியது.
பாஜகவின் தலைவர்
இதன் விளைவாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அறுதிப்பெரும்பான்மையுடன் (283 தொகுதிகளில்) வெற்றி பெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. இந்த ஐந்து ஆண்டுகளில் பாஜகவின் வலிமையான தலைவர் தான் தான் என்ற அளவுக்கு மாறிவிட்டார்.
எதிர்க்கட்சிகள் முயற்சி
2019ம் ஆண்டு தேர்தல் அப்படி இருக்கவில்லை. எல்லா எதிர்க்கட்சிகளும் மோடியை கடுமையாக எதிர்த்தன. மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்பதற்காக உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் ஒன்றாக கூட்டணி அமைத்தன. காங்கிரஸ் தனித்து நின்றது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடன் கூட கைகோர்க்க தயார் என்ற அளவில் மம்தா களம் இறங்கினார்.
மோடி அமித்ஷா பிரச்சாரம்
இதனால் போட்டிகள் கடுமையாக இருப்பதை உணர்ந்த மோடி, அமித்ஷா, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப்படியாக பிரச்சாரங்களை மேற்கொண்டனர். இந்தியா முழுவதுமே மோடியும், அமித்ஷாவும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்கள். அடுத்தடுத்து ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மாறி மாறி பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள்.
பலமான கூட்டணி
அதேநேரம் கூட்டணியிலும் வலிமையாக சூழலை உருவாக்கினார்கள். மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி, தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி, பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி, பஞ்சாபில் அகாலிதளம், வடகிழக்கு மாநிலங்களில் சிறிய கட்சிகளுடன் கூட்டு என கூட்டணியையும் வலிமையாக்கினர்.
காங்கிரஸை சேர்க்க மறுப்பு
இதனிடையே பாஜக தேர்தல் யுத்திகளை வலிமையாக்கினாலும், காங்கிரஸ் உடன் எதிர்க்கட்சிகள் ஒன்று சேராதது பாஜகவுக்கு மிகப்பெரிய பலத்தை இந்த தேர்தலில் கொடுத்திருப்பதை தேர்தல் கருத்துக்கணிப்பு காட்டுகின்றன. டெல்லியிலும், பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கவில்லை. உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்காமல் கழட்டிவிட்டது. ஆந்திராவில் தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இரண்டுமே சேர்க்கவில்லை. மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் கட்சியை சேர்த்துக்கொள்ளவில்லை.
திரிணாமுல் உடன் போட்டி
கடைசி கட்ட தேர்தலின் போது இந்து மத அடையாளமான காவி உடையில் பிரதமர் மோடி யோகாசனம் செய்து வாக்களர்களிடையே பிரபலமானது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உடன் கடும் போட்டி என பெரிய அளவில் எல்லா வித்தைகளையும் மோடியும் அமித் ஷாவும் இறக்கி உள்ளார்கள்.இவை எல்லாம் தான் பாஜகவுக்கு சாதமாக தேர்தல் கருத்துக்கணிப்பினை பிரதிபலித்துள்ளது.ஆனால் நிஜம் என்ன என்பது மே 23ம் தேதி தெரிந்துவிடும்.