டிகே சிவக்குமாரின் ஜாமீன் மனுவை நிராகரித்தது டெல்லி நீதிமன்றம்... திகார் சிறையில் அடைப்பு
டெல்லி: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டி.கே.சிவக்குமார் ஜாமீன் கோரி தாக்கல் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் டி.கே.சிவக்குமார். முன்னாள் அமைச்சரான இவரது வீட்டில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடந்தது. இதில் அவரது டெல்லி வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.8.59 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக அமலாக்கத் துறையினர், டி.கே.சிவக்குமார் மீது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு பதிந்தனர். இந்த வழக்கின் விசாரணைக்கு டெல்லி வந்து ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை கடந்தமாத இறுதியில் சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனை ரத்து செய்ய கோரிய அவரது மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
விசாரணைக்கு பின் கைது
இதையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் ஆஜரானார். அவரிடம் 4 நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பி தீவிரமாக விசாரித்தனர். 4-வது நாள் விசாரணையின் முடிவில், கடந்த செப்டம்பர் 3-ந் தேதி டி.கே.சிவக்குமாரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
சிவக்குமாருக்கு காவல் நீட்டிப்பு
இதையடுத்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் டி.கே.சிவக்குமார். அவரை 9 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து மீண்டும் கடந்த 13-ந் தேதி டெல்லி நீதிமன்றத்தில் டி.கே.சிவக்குமாரை ஆஜர்படுத்தினார். அப்போது அவருக்கு நீதிமன்ற காவலை மீண்டும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமலாக்கத்துறை எதிர்ப்பு
இந்நிலையில், டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதன் மீதான வாதங்கள் கடந்த செப்டம்பர் 21ம் தேதி நடந்த முடிந்தது. அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ், குற்றம்சாட்டப்பட்ட சிவக்குமார் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவருக்கு ஜாமின் அளிக்ககூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார்.
திகார் சிறையில் அடைப்பு
இந்நிலையில் நீதிபதி அஜய் குமார் குஹார் இன்று அளித்த தீர்ப்பில். சிவக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். டிகே சிவக்குமார் தொடர்ந்து நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அவரது உடல் நிலை குறித்து வழக்கறிஞர் எழுப்பிய கவலையை அடுத்து சில வழிகாட்டுதல்களை அதிகாரிகளுக்கு அறிவித்தார். இதையடுத்து, டி.கே.சிவக்குமார் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.