நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிந்தது - இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது. இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 நாட்களுடன் முடித்துக் கொள்ளப்பட்டுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த கூட்டத்தொடர் இன்றுடன் முடித்துக்கொள்ளப்பட்டு இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. 57 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடே கடந்த 5 மாதங்களாக முடங்கியிருக்கும் சூழ்நிலையில் நிலுவையில் இருந்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக 5 மாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. அக்டோபர் 1 ஆம் தேதி இந்த கூட்டத்தொடர் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ராஜ்யசபா நடைபெறும் நேரமும், லோக்சபா நடைபெறும் நேரமும் மாற்றப்பட்டது. காலை நேரத்தில் ராஜ்யசபா கூட்டமும், மாலை நேரத்தில் லோக்சபா கூட்டமும் நடைபெற்றது. இரு அவைகளும் தினமும் 4 மணி நேரம் மட்டுமே நடைபெற்றன.
கொரோனா கால விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான வார விடுமுறை இன்றி இரு அவைகளும் இயங்கின. உறுப்பினர்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து கூட்டத்தொடரில் பங்கேற்க வசதியாக இரு அவைகளும் ஒங்கிணைக்கப்பட்டன.
மழைக்கால கூட்டத் தொடரில் வேளாண் மசோதா, தொழிலாளர் சட்ட மசோதாக்கள் எதிர்கட்சியினரின் அமளி துமளி எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் புறக்கணிக்கப்போவதாக அறிவித்து வெளிநடப்பு செய்தனர்.
இதனிடையே இந்த கூட்டத்தொடரில் பங்கேற்ற 25க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
கடைசி நாளான இன்று எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாத நிலையில், தொழிலாளர் தொடர்பான 3 சட்ட மசோதாக்களை நிறைவேற்றக்கூடாது என எதிர்க்கட்சிகள் சார்பில் அவைத்தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. லோக்சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்ட 3 தொழிலாளர் மசோதாக்களும் இன்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. ராஜ்சபாவை காலவரம்பின்றி ஒத்தி வைப்பதாக காலையில் சபை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். ராஜ்யசபா கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பிரதமர் மோடி அவைக்கு வந்திருந்தார்.
திமுக ராஜ்யசபா எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா உறுதி - தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
அதே போல லோக்சபாவை காலவரம்பின்றி ஒத்திவைப்பதாக லோக்சபா தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். கடந்த பத்து நாட்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கார சார விவாதங்கள், போராட்டங்கள், வெளி நடப்புகள் நடைபெற்றன இந்த மழைக்கால கூட்டத்தொடரில் வேளாண் மசோதாவினால் அனல் பறந்தது.