கொரோனாவுக்கு மருந்தாக கங்கை நீரை பயன்படுத்தி ஆய்வு செய்யப்படுமா? ஐசிஎம்ஆர் அளித்த விளக்கம்
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்தாக கங்கை நதி நீரை பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடத்துமாறு மத்திய ஜல் சக்தி துறையின் என்.எம்.சி.ஜி அமைப்பு அளித்த பரிந்துரையை ஏற்க வேண்டுமெனில் கூடுதல் ஆய்வு தகவல்கள் தேவைப்படுகிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
நதிகளை தூய்மைப்டுத்தும் திட்டத்தை மேற்கொண்டு வரும் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் ஒரு பிரிவாக தூய்மையான கங்கைக்கான தேசிய மிஷன் (என்.எம்.சி.ஜி), என்ற அமைப்பு உள்ளது. கங்கையை தூய்மை படுத்தும் இந்த அமைப்பில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலர் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்த அமைப்பு கங்கை நீருக்கு கொரோனாவை குணப்படுத்தும் தன்மை இருப்பதாக கூறியது.
என்.எம்.சி.ஜி அமைப்பின் அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில், இந்த திட்டங்கள் குறித்து தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (NEERI) விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடப்பட்டது. இந்த நிறுவனம் தான் முன்னர் 'கங்கா நதியின் சிறப்பு பண்புகளை புரிந்து கொள்ள நீர் தரம் மற்றும் வண்டல் மதிப்பீடு' என்ற ஆய்வை நடத்தியது.
கொரோனா அச்சுறுத்தல்.. எல்லைப் பகுதிகளில் இருமாநில போலீஸாருக்குள் மோதல்
பாக்டீரியோபேஜ்கள்
NEERI ஆய்வின்படி, கங்கை நீரில் நோய்க்கிருமி பாக்டீரியாக்களுக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான பாக்டீரியோபேஜ்கள் உள்ளதாக தெரிவித்தனர். NEERI உடன் நாங்கள் நடத்திய ஆலோசனைகளின் போது, கங்கை நீர் அல்லது வண்டல் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன என்பதற்கு கூடுதலான ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். எனவே தான் நாங்கள் ஐசிஎம்ஆர் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தோம் என்று தெரிவித்தனர்.
நோய் எதிர்ப்பு சக்தி
இதனிடையே இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு என்.எம்.சி.ஜி ஆராய்ச்சி செய்ய கோரி மூன்று விஷயங்களை பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. முதல்பரிந்துரையாக கங்கையின் நீரில் "நிஞ்ஜா வைரஸ்" இருப்பதாகவும் விஞ்ஞானிகள் இதை பாக்டீரியோபேஜ்கள் என்று அழைப்பதாகவும் அது மனிதர்களை பாதிக்கும் வைரஸுகளை எதிர்த்து போரிடும் என்று கூறியிருந்தது. மற்றொரு பரிந்துரையில் தூய கங்கை நீர் வைரஸை எதிர்த்துப் போராட உதவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மூன்றாவது பரிந்துரை, மிகவும் விரிவானது, கங்கை நீரின் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடுவதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் குறித்து ஆய்வு நடத்துமாறு கூறியிருந்தது.
கூடுதல் தகவல் தேவை
அத்துடன் கங்கை நீரை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு கொடுத்து சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு என்.எம்.சி.ஜி அமைப்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ஐசிஎம்ஆர்) பரிந்துரைத்தது. ஆனால் இதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஏற்கவில்லை. ஏனெனில் இதற்கு கூடுதல் அறிவியல் தகவல்கள் தேவை என்று தெரிவித்துள்ளது. .
ஐ.சி.எம்.ஆர் தலைவர் விளக்கம்
ஐ.சி.எம்.ஆரில் ஆராய்ச்சி முன்மொழிவுகளை மதிப்பீடு செய்வதற்கான குழுவின் தலைவராக இருக்கும் டாக்டர் ஒய் கே குப்தா, கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக கங்கை நீரின் மூலம் மருத்துவ ஆய்வுகளைத் தொடங்குவதற்கு தற்போது கிடைக்கக்கூடிய சான்றுகள் மற்றும் தகவல்கள் வலுவாக இல்லை என்றார். இதனிடையே என்.எம்.சி.ஜி அதிகாரிகள் தங்கள் திட்டங்களின் நிலை குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவல் தொடர்புகளையும் ஐ.சி.எம்.ஆரிடமிருந்து இதுவரை பெறவில்லை என்றார்கள்.