விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்குவது அதிகரிப்பு!
டெல்லி: இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் ஆகியவை விபத்தில் சிக்குவது சமீபகாலமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி இந்திய விமானப்படைக்கு சொந்தமான 15 போர் விமானங்கள் உள்பட 27 வானூர்திகளை இந்திய விமானப்படை இழந்துள்ளது.
இது குறித்து தகவல் தெரிவித்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இதுபோன்ற விபத்துகளில் இந்திய விமானப்படை 15 போர் விமானங்கள் உள்பட 27 வானூர்திகளை இழந்துள்ளது என தெரிவித்துள்ளது. கடந்த 2016- 17 நிதி ஆண்டிலிருந்து ஏற்பட்ட விபத்துகளை குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு துறை, 2016-17 நிதியாண்டில், ஆறு போர் விமானங்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள், ஒரு போக்குவரத்து விமானம் மற்றும் ஒரு பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது என்று கூறியுள்ளது.
அதுபோல இரண்டு போர் விமானங்கள், ஒரு பயிற்சி விமானம் ஆகியவற்றை 2017-18 ம் ஆண்டில் ஏற்பட்ட விபத்தில் இந்திய விமானப்படை இழந்துள்ளது. ஏழு போர் விமானங்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் இரண்டு பயிற்சி விமானங்கள் ஆகியவற்றை இந்திய விமானப்படை 2018-19 ம் ஆண்டில் இழந்துள்ளது. இதனால் இழப்பு அதிகமாகியுள்ளது.
இப்படியாக விபத்துக்குள்ளான 11 சம்பவங்களில் தற்காலிக இழப்பின் அளவு சுமார் 524.64 கோடி ரூபாய். இதே நிதியாண்டில் அதாவது மக்களவை தேர்தல் நெருக்கத்தில் கடந்த பிப்ரவரி 27 அன்று பாகிஸ்தான் விமானப்படை விமானங்களுடன் சண்டையின்போது விங் கமாண்டர் அபிநந்தனால் இயக்கப்பட்ட மிக் -21 போர் விமானம் பாகிஸ்தானுக்குள் விபத்தில் சிக்கியது.
இந்த இழப்பும் இந்த பட்டியலில் இடம்பெறுகிறது. இது மட்டுமல்லாது அதே நாளில் ஒரு எம்ஐ 17 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் இந்திய விமானப்படையை சேர்ந்த 6 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். நடப்பு நிதியாண்டான 2019-20 நிதியாண்டில் ஏ.என் -32 போக்குவரத்து விமானம் அருணாச்சல பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது, இந்த மாத தொடக்கத்தில் நடந்த இந்த விபத்தில் 13 விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர் என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.