"8.50 லட்சம் வைரஸ்".. ஒரு கொரோனாவையே தாங்க முடியலை.. இதுல இது வேறயா.. கண்ணைக் கட்டுதே!
டெல்லி: இப்போது வந்துள்ள கொரோனாவை விட மிக மோசமான நோய்கள் எல்லாம் எதிர்காலத்தில் பரவும். நாம் உடனடியாக நமது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என்று ஐ.நா. சூழலியல் குழு எச்சரித்துள்ளது.
இயற்கையைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் இதுபோன்ற பேரழிவு நோய்கள் அடிக்கடி வரும் அபாயம் அதிகம் உள்ளது என்றும் சூழலியல் குழு எச்சரித்துள்ளது.
உலகம் ஒரு நாள் அழியும் என்பது இயற்கை.. ஆனால் நாம் போகிற போக்கைப் பார்த்தால் நாமே அதை வேகமாக செய்து முடித்து விடுவோம் போல தெரிகிறது.
தமிழகம்.. ஊரடங்கில் மேலும் சலுகைகள்.. தியேட்டர்கள், பள்ளிகள் திறக்க அனுமதியா? இன்று அரசு அறிவிப்பு
இயற்கைப் பேரழிவு
இயற்கை மீது என்று மனிதன் கை வைத்தானோ அன்றே அவனது அழிவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது. இதைத்தான் தற்போது ஐ.நா. சூழலியல் குழுவும் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் கொரோனாவை விட மிகக் கொடிய பேரழிவு நோய்கள் பரவும். அதுவும் அடிக்கடி வரும் என்றும் இந்தக் குழு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொடி கட்டிப் பறக்கும் கொரோனா
உலகம் முழுவதும் தற்போது கொரோனா கொடி கட்டிப் பறக்கிறது. கொத்துக் கொத்தாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அலை அலையாக அது பரவி வரும் நிலையில் எப்போது இதற்கு முடிவு வரும் என்று கணிக்கவே முடியாத நிலையே நிலவுகிறது.
லட்சக்கணக்கில் பலி
இதுவரை கொரோனாவுக்கு உலகம் முழுவதும் பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு வருகின்றன. ஆனாலும் இதுவரை ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் எதுவும் இல்லை. இந்த நிலையில்தான் ஐ.நா. குழுவின் எச்சரிக்கை வந்து சேர்ந்துள்ளது.
இனியும் பரவும்
இதுகுறித்து அக்குழுவின் தலைவரான பீட்டர் டஸாக் கூறுகையில், கொரோனா போன்ற நோய்கள் இனி அடிக்கடி பரவும். அதை விட மோசமான நோய்களையும் நாம் மறுக்க முடியாது. மக்கள் இறப்பு தவிர்க்கப்பட முடியாதது. புதுப் புது நோய்கள் கிளம்பி உலகம் முழுவதும் அது பரவும். இதற்கெல்லாம் காரணம் நாம்தான்.
காக்காவிட்டால் ஆபத்து
இயற்கைக்கு மதிப்பு கொடுக்காமல் அதை சீரழித்து வருவதால்தான் இதுபோன்ற சூழல்கள் ஏற்பட்டுள்ளன. நாம் மாறியாக வேண்டும். இயற்கையை பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழல் சீர்கேடுகள் நிறுத்தப்பட வேண்டும். நமது வாழ்க்கை முறையில் மிகப் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. இதெல்லாம் நடக்கும்போதுதான் இதுபோன்ற பேரழிவுகளை நம்மால் தடுக்க முடியும்.
8.50 லட்சம் வைரஸ்கள்
உலகம் முழுவதும் விலங்குகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் உடல்களில் கிட்டத்தட்ட எட்டரை லட்சம் வைரஸ்கள் உள்ளன. எனவே மனிதர்களுடன் ஏற்கனவே வைரஸ்கள் வாழ்ந்து கொண்டுள்ளன. எனவே பிரச்சினைகளையும் நாம் சந்தித்துதான் ஆக வேண்டும். கொரோனா குறித்து நாம் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. நமது தவறுகள்தான் முக்கியக் காரணம் என்று கூறினார் டஸாக்.
ஒரு கொரோனாவையே நம்மால் தாங்க முடியலையே.. இதுல இது வேறயா.. இப்பவே கண்ணைக் கட்டுதே!