40% இந்திய மாவட்டங்களில்.. எழுச்சி பெறும் கொரோனா - அதிர்ச்சி ரிப்போர்ட்
டெல்லி: இந்தியாவில் 301க்கும் அதிகமான மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு சராசரி வீதம் 20% அல்லது அதற்கு அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் வீசி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நேற்று (மே.8) சனிக்கிழமை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,18,92,676 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,01,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 4,187 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,38,270 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு.. தயாராகும் மக்கள் - என்னென்ன இயங்கும்னு தெரிஞ்சுக்கோங்க!
கொரோனா பாதிப்பு சராசரி வீதம்
இந்நிலையில், இந்தியாவில் மொத்தம் உள்ள 741 மாவட்டங்களில், மே முதல் வாரத்தில், 40% அல்லது 301க்கும் அதிகமான மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு சராசரி வீதம் 20% அல்லது அதற்கு அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் அனைத்தும் மொத்தமுள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 31 மாநிலங்களில் உள்ளன. இது பரவலான வைரஸ் எழுச்சியைக் குறிக்கிறது என்று டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
தலா இரண்டு மாவட்டம்
50% க்கும் அதிகமான நேர்மறை விகிதங்களைக் கொண்ட 15 மாவட்டங்களில், ஹரியானாவில் நான்கு, அருணாச்சல பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் தலா இரண்டு மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் பெரும்பாலான பாதிப்புகள் கிராமப்புறங்களில் உள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்த இடங்களில்
இருப்பினும், துல்லியமான கொரோனா சோதனை எண்ணிக்கை விவரம் கிடைக்காததால், கொரோனா பாதிப்பு சராசரி வீதம் அதிகரிப்புக்கு, போதிய அளவில் கொரோனா சோதனை எடுக்கப்படாதது காரணமா என்பது தெளிவாக தெரியவில்லை. அருணாச்சல பிரதேசத்தின் சாங்லாங் மாவட்டத்தில் நேர்மறை விகிதம் அதிகபட்சமாக 91.5% ஆக உள்ளது. அடுத்து புதுச்சேரியில் யானம், ராஜஸ்தானில் பிகானேர், அருணாச்சல பிரதேசத்தில் திபான் பள்ளத்தாக்கு மற்றும் ராஜஸ்தானில் பாலி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
அதிகரிக்கும் வைரஸ்
20% பிளஸ் பட்டியலில் அதிக எண்ணிக்கையிலான மாவட்டங்களைக் கொண்ட மாநிலம் கேரளா ஆகும், அதன் 14 மாவட்டங்களில் 13 இதில் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் 70% க்கும் மேற்பட்ட மாவட்டங்களைக் கொண்ட மாநிலங்கள் ஹரியானா (22 இல் 19), மேற்கு வங்கம் (23 இல் 19), டெல்லி (11 இல் 9) மற்றும் கர்நாடகா (31 இல் 24) ஆகியவையாகும். கோவா மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களும், சண்டிகரில் ஒரு மாவட்டமும், சிக்கிமில் உள்ள நான்கு மாவட்டங்களில் மூன்று மாவட்டங்களும் இந்த பட்டியலில் ஒரு பகுதியாகும்.