சிபிஎஸ்இ டாப்பர்ஸ் அதிகம் பேர் பாரின்லதான் இருக்காங்களாம்...என்ன காரணம் தெரியுமா...நீங்களே பாருங்க!
புதுடெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) நடத்தும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற பலர் வெளிநாடுகளில் உயர்கல்வி படிப்பதாகவும், உயர் நிறுவனங்களில் பணிபுரிவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் வகிப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முதன்மைக் காரணம் இந்தியாவில் உயர் கல்வி தரம் இல்லை என்பதைதான் காட்டுகிறது என கல்வி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தியாவில் தேசிய அளவில் புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
முதலிடம் பிடிப்பவர்களின் வாக்குறுதி
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) தேசிய அளவில் பள்ளிகளை நடத்தி வருகிறது. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்தி வருகிறது. சிபிஎஸ்இ பள்ளியில் படித்த பலர் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் முதலிடம் பெற்று வருகின்றனர்.
இந்த தேர்வுகளில் முதலிடம் பிடித்த பலரும் ரிசல்ட் நாளில் இந்தியாவில் உயர் பதவியில் பணிபுரிவோம். மருத்துவர் மற்றும் பல்வேறு துறைகளில் நமது மக்களுக்கு சேவை செய்வோம் என கூறுகின்றனர்.
ஆனால் இருப்பது வெளிநாடு
ஆனால் சிபிஎஸ்இ பள்ளியில் படித்த பெரும்பாலானோர் பல்வேறு வெளிநாடுகளில் மேற்கொண்டு உயர்கல்வியில் படித்து வருவதும், சிலர் அங்குள்ள உயர் நிறுவங்களின் பணிபுரிந்து வருவதும் தனியார் பத்திரிக்கை நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிபிஎஸ்இ நடத்திய 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளில், 1996-ம் ஆண்டு, 2015-ம் ஆண்டுக்கு இடையில் முதலிடம் பிடித்த 86 ஆண்கள், பெண்கள் தற்போது என்ன செய்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து அந்த பத்திரிக்கை நிறுவனம் ஆய்வு நடத்தியது.
கூகுள் நிறுவனத்தில் அதிகம்
இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தற்போது வெளிநாட்டில் வசிப்பது தெரியவந்துள்ளது. அவர்களில் சிலர் வேலை செய்கிறார்கள், பெரும்பாலானோர் அங்கு உயர் படிப்பு படித்து பட்டங்களைப் பெறுகிறார்கள். வெளிநாட்டில் பணிபுரிபவர்களில் தொழில்நுட்பத் துறையில் பெரும்பாலானவர்கள் வேலை செய்கிறார்கள், அதைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் நிதி அமைப்புகளில் வேலை செய்கிறார்கள். அதிலும் கூகுள் நிறுவனத்தில் இவர்களில் அதிகம் பேர் உள்ளனர்.
அமெரிக்காதான் பர்ஸ்ட் சாய்ஸ்
21 முதல் 42 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் உள்ளனர். இவர்களின் பலரின் விருப்ப இடமாக அமெரிக்கா உள்ளது. அதாவது ஒவ்வொரு நான்கு பேரில் மூன்று பேர் அமெரிக்காவில் உள்ளனர். மற்றவர்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், சீனா, கனடா, பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகதத்தில் வசித்து வருகின்றனர்.
என்ன காரணம்?
சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் வகிப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முதன்மைக் காரணம் உயர் கல்விதான் என இந்த ஆய்வு மூலம் உறுதியாக தெரியவந்துள்ளது. அதாவது சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்தவர்களில் 70% க்கும் அதிகமானோர் தங்களது உயர்கல்வி படிப்பான இளங்கலை அல்லது முதுகலை படிப்பைத் தொடரவே இந்தியாவை விட்டு வெளியேறுகிறனர். அதாவது இந்த 86 பேரில் ஒரு டஜன் பேர் மட்டுமே வேலைக்குச் சென்றனர். மற்றவர்கள் உயர்கல்விதான் படித்து வருகின்றனர்.
புதிய கல்வி கொள்கை
இவ்வாறு சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் வகிப்பவர்கள் உயர் கல்விக்காக நாட்டை விட்டு வெளியேறுவது இந்தியாவில் உயர்கல்வியின் தரத்தை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளதாக கல்வி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது. ஆனால் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்படத்தக்கது.