கொரோனா 2ஆம் அலை.. மோசமாக பாதிக்கப்படும் குழந்தைகள்.. அறிகுறிகளும் புதிது.. வல்லுநர்கள் பகீர் தகவல்
டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தொடங்கியுள்ள நிலையில், இதில் வயதானவர்களைக் காட்டிலும் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத 2.5 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதனால் கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு பல புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இரவு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளன.
3ஆம் அலை மிக விரைவில் தொடங்கும்.. நடவடிக்கைகளில் அரசியல் இல்லை.. அறிவியல் மட்டுமே.. ஆதித்ய தாக்கரே
குழந்தைகள் அதிகம்
இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலையில், அதிகளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா பரவலின் முதல் அலையில் வயதானவர்களே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த முறை கொரோனா காரணமாகச் சிறுவர்கள் பாதிக்கப்படுவது மிக குறைவாகவே இருந்தது.
புதிய அறிகுறிகள்
ஆனால், இந்த முறை முறை குழந்தைகளுக்கு மத்தியில் அதிகளவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்படுவதாக மருத்துவர் கவுரி அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முறை கொரோனா அறிகுறிகளும் புதிதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொண்டை வறட்சி, இரைப்பை குடல் பிரச்சினைகள், குமட்டல், சிவப்பு கண்கள், தலைவலி போன்றவை கொரோனாின் முக்கிய அறிகுறிகள் உள்ளது. கடந்த முறையைப் போல அனைவருக்கும் காய்ச்சல் ஏற்படுவதில்லை என அவர் தெரிவித்தார்.
ஆராய்ச்சி தேவை
இருப்பினும், குழந்தைகள் மத்தியில் கொரோனா பரவல் இரண்டாம் அலை வேகமாக உள்ளது என்பதை உறுதி செய்யக் கூடுதல் தகவல்கள் தேவை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று தொடர்ந்து எவ்வாறு மாற்றமடைகிறது என்பது குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று வைரலாஜி வல்லுநர் ஷாஹித் ஜமீல் தெரிவித்துள்ளார். ஆனால், அதேநேரம் மாஸ்க்குகள் அணிவது போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவிர்க கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலைநகர் டெல்லி
தலைநகர் டெல்லியில் இந்த முறை கொரோனா உறுதி செய்யப்படுபவர்களில் 60% அதிகமானோர் 45 வயதுக்கும் குறைவானவர்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது மக்கள் அதிகளவில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பாக வீடுகளில் சென்று கொரோனா பரிசோதனை செய்யும் பணிகள் அதிகரித்துள்ளதாகவும் டெல்லி மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.