ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேறிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா.. கடுமையாகும் விதிகள்!
மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
டெல்லி: மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இரண்டாவது முறையாக பதவி ஏற்று இருக்கும் மத்திய பாஜக அரசு அசுர வேகத்தில் மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றி வருகிறது. நேற்றுதான் கடும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ராஜ்யசபாவில் முத்தலாக் தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மோட்டார் வாகன சட்டத்தின் திருத்த மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது.
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு.. கோவையில் ஆர்ப்பாட்டம்.. மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்
தற்போது மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 103 பேரும் எதிராக 13 பேரும் வாக்களித்தனர். அதிமுக எம்பிக்கள் சொன்ன சில திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த மசோதா நிறைவேறி இருக்கிறது.
பழைய சட்டத்தில் இருந்து மொத்தம் 93 மாற்றங்கள் இந்த புதிய மசோதாவில் செய்யப்பட்டு இருக்கிறது. 2017ம் ஆண்டே மாநிலங்களவையில் இதை பாஜக நிறைவேற்ற முயன்று தோல்வி அடைந்தது. ஆனால் தற்போது மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தற்போது மீண்டும் மசோதாவை வெற்றிகரமாக தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் போக்குவரத்து விதிகளில் பின் வரும் மாற்றங்கள் செய்யப்படும். 93 மாற்றங்களில் பின் வரும் மாற்றங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
- வாகனம் ஓட்டும் நபர்கள் செய்யும் சிறிய தவறுகளுக்கு இனி அபராதம் 100 ரூபாயில் கிடையாது. அதற்கு பதிலாக 500 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.
- வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறும்போது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.
- சீட் பெல்ட் அணியாமல் சென்றால் 1000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்.
- இன்சூரன்ஸ் இல்லாமல் வண்டிகளை ஓட்டினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்.
- ஓலா, உபேர் போன்ற டாக்ஸி சேவை செய்யும் நிறுவனங்களுக்கான உரிமம் வழங்குவது இதன் மூலம் சரி செய்யப்படும்.
- மது அருந்திவிட்டு ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்.
- அதேபோல் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறும்போது 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- அதேபோல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டினால் 5,000 ரூபாய் வசூலிக்கப்படும். இதற்கு முன் 500 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டது.
- 18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் அதன் உரிமையாளருக்கு 25,000 ரூபாய் அபராதம் மேலும் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
- வாகனத்தை தவறான முறையில் விபத்து ஏற்படுத்துவது போல ஓட்டினால் 5,000 ரூபாய் வசூலிக்கப்படும், திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.