திமுக காங்கிரஸ் டீல் ஓகே?.. ராகுல் காந்தியுடன் கனிமொழி தீவிர ஆலோசனை!
ராகுல் காந்தியை கனிமொழி நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கனிமொழி எம்பி இன்று நேரில் சந்தித்து திமுக-காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார்.
விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கி உள்ளனர்.
இதில், தமிழகத்தில் அதிமுக-பாமக கூட்டணி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைவது, தொகுதி பங்கீடு குறித்தெல்லாம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
கே.எஸ்.அழகிரி
இந்நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி முடிவாகிவிட்ட ஒன்று என்றாலும், பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காகத்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் முகாமிட்டு இருக்கிறார்.
12 தொகுதிகள்
நேற்றுகூட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் கனிமொழி எம்பி கலந்து கொண்டார். ஸ்டாலினின் உத்தரவின் பேரிலேயே கனிமொழி இந்த ஆலோசனையில் ஈடுபட்டார். ராகுல்காந்தியை அவரது வீட்டில் சந்தித்து கனிமொழி ஆலோசனையும் நடத்தினார். அப்போது காங்கிரஸ் தரப்பு 12 தொகுதிகளை கேட்டதாகவும், ஆனால் திமுக 8 தொகுதிகள் தர முன்வந்திருப்பதாகவும் தகவல்கள் வந்தன.
பேச்சுவார்த்தை
இந்நிலையில் இன்றும் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் திமுக சார்பாக கனிமொழி கலந்து கொண்டு, காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், தங்கபாலு, ஈவிகேஎஸ். இளங்கோவன், ராமசாமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர். இந்தப் பேச்சின்போது 10 தொகுதிகள் வரை திமுக தர முன்வந்ததாக கூறப்படுகிறது.
தமிழகம் வருகை
இந்த இரு கட்சிகளின் கூட்டணி விவரம் குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும், தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல் காந்தி தமிழகம் வருவார் என்றும் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமார்
கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக எக்ஸ்பிரஸ் வேகத்திலும், திமுக சரக்கு ரயில் வேகத்திலும் சென்று கொண்டிருக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருக்கும் நிலையில், டெல்லியில் சூடு பறக்க தொகுதி பங்கீடு நடந்து வருகிறது.