தமிழ்நாட்டில் தெரு தெருவா தண்ணிக்கு அலையறாங்களே.. பாஜகவுக்கு அக்கறை இருக்கா? கேரள எம்பியின் சுளீர்!
தமிழக தண்ணீர் பஞ்சம் குறித்து லோக்சபாவில் குரல் எழுப்பினார் எம்பி குஞ்ஞாலிக்குட்டி
டெல்லி: "தெருதெருவா தண்ணிக்கு தமிழ்நாட்டில அலைஞ்சிட்டு இருக்காங்க.. அதை பத்தியெல்லாம் நீங்க பேச மாட்டீங்களா?" என்று ஒரு எம்பி கேள்வி எழுப்பி உள்ளார். இப்படி லோக்சபாவில் கேள்வி எழுப்பியவர் நம்ம ஊர் எம்பி இல்லை என்பதுதான் ஹைலைட் மேட்டரே!
அவர்தான் குஞ்ஞாலிக்குட்டி.. ஆம்.. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்தான், இப்படி கொதித்து போய் கேள்வி கேட்டவர்.
தமிழகம் மீது கேரளத்துக்கு எப்பவுமே ஒரு சாப்ட் கார்னர் இருக்கும். அதேபோல, கேரளத்தை அண்டை மாநிலமாக பாவிக்க முடியாத தன்மை நமக்கும் உண்டு.
இதில் எந்த மாநிலத்துக்கு ஒரு பிரச்சனை, பேரிடர் என்றாலும், பரஸ்பரம் உதவுவது நம் இரு மாநிலத்தின் அடிப்படை குணம். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இதனால் தண்ணீரை ரெயில் மூலம் அனுப்பி உதவுகிறோம் என்று பினராயி விஜயன்கூட சொல்லி இருந்தார்.
ஆனால், இந்த பிரச்சனையை லோக்சபாவில் எழுப்ப முடியுமா? அப்படியே எழுப்பினாலும் மாநிலம் சார்ந்த பிரச்சனையை எழுப்புவது அந்தந்த மாநில எம்பிக்களாகத்தானே இருக்க முடியும்? இதிலிருந்துதான் குஞ்ஞாலிக்குட்டி வேறுபடுகிறார்.
கேரள மாநிலத்திலேயே எத்தனையோ பிரச்சனைகள் சூழ்ந்து கிடக்க, தமிழகத்துக்காக குரல் கொடுத்து மத்திய அரசை திணறடித்துள்ளார் இவர். "தமிழ்நாடு இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா? தமிழ்நாட்டு மக்கள் தெருவெங்கும் குடங்களோடு அலையும் அவலம் நீடித்து வருகிறது. இதை பற்றி ஏன் இந்த அரசாங்கத்திற்கு அக்கறையில்லை?
இந்த அவையில் பேசிய பாஜக உறுப்பினர்களில் ஒருவர் கூட இதைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை? நீங்கள் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவில்லை. இப்போது தேர்தலுக்குப் பிறகு, மிகப்பெரிய பேச்சு முத்தலாக்காகத்தான் உள்ளது.
இருக்கிற பிரச்சனைகளை எல்லாம் விட்டுவிட்டு, இந்த விஷயத்தை முதலில் கையில் எடுப்பது வெட்கக்கேடு இல்லையா? அங்கே பீகாரில் குழந்தைகள் பன்றி காய்ச்சலால் இறந்து கொண்டிருக்கிறார்கள், அதை பற்றி ஏதாவது யாராவது இங்கே பேசினீர்களா? முக்கியமா, நாடு எதிர்கொள்ளும் எந்தவொரு கடுமையான பிரச்சினைகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தவே இல்லை" என்று பொரிந்து தள்ளிவிட்டார் குஞ்ஞாலிக்குட்டி.
குஞ்ஞாலிக்குட்டியின் இந்த பேச்சை பாஜகவினர் எதிர்பார்க்கவில்லை. குஞ்ஞாலிக்குட்டியின் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.