இன்றைய பட்ஜெட்டில் வேலைவாய்ப்பை பெருக்கும் அறிவிப்புகள் தேவை: திருச்சி சிவா
டெல்லி: வேலைவாய்ப்பை பெருக்குவதற்கான அறிவிப்புகளை இன்றைய பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் என திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.
இன்று மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் மாநிலங்களவை அலுவல் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவாவும் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதும் பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து அதிகரித்து வரும் மத்திய அரசு அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை பெருநிறுவனங்களின் கடனை தள்ளுபடி செய்வதிலேயே செலவழிக்கிறது.
இதனால் நாட்டு மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. விலைவாசிதான் உயர்கிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் எழுப்பி பேச இருக்கிறேன். பொருளாதார இழப்பை சீர் செய்யும் வகையிலும், வேலைவாய்ப்பைப் பெருக்கும் வகையிலும் நாளைய பட்ஜெட்டின்போது கூடுதல் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வந்த போது கண்டுகொள்ள மத்திய அரசும் பிரதமரும் தற்போது அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக தொடர்ந்து குரல் எழுப்பும் என்றார் திருச்சி சிவா.