உன்னாவ் மர்ம மரணங்கள்... நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம்!
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவால் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை கார் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இன்று போராட்டம் நடத்தினர்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் தன்னை பலாத்காரம் செய்யதாக 16 வயது பெண் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் புகார் கொடுத்தார். இந்நிலையில் புகார் கொடுத்த பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் மர்மமாக உயிரிழந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட எம்எல்ஏ குல்தீப் சிங் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண், வழக்கறிஞர் மற்றும் உறவினர்களுடன் காரில் நேற்று சென்று கொண்டிருந்தார். இந்த கார் லாரி மோதி பயங்கரமாக விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது திட்டமிட்ட படுகொலை என புகர் எழுந்துள்ளது.
இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு முன்னாள் ராணுவ கேப்டன் ஒருவர் கும்பல்களால் அடித்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் யோகி தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. எனவே இரண்டு சம்பவங்கள் தொடர்பாக மத்திய பாஜக அரசு பதில் அளிக்க வேண்டும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் சமாஜ்வாதி கட்சி எம்பிக்கள், திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் முழுமையாக பங்கேற்று இருந்தனர். திமுக மற்றும் இடதுசாரி எம்பிக்களும் போராட்டத்தில் பங்கேற்று இருந்தனர். திமுக எம்பி ஆ ராசா கையில் நம் முன்னாள் ராணுவ வீரரை கொன்றுவிட்டார்க்ள் என்ற பதாகையுடன் முதல் வரிசையில் நின்று போராட்டம் நடத்தினார்.