விஸ்வரூபம் எடுத்த டெல்லி வன்முறை.. பாஜக எம்பிக்களை சந்தித்த பிரதமர் மோடி.. முக்கிய அறிவுரை
டெல்லி: நாட்டு மக்களிடையே அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை இருப்பதை பாஜக எம்பிக்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். டெல்லி வன்முறைக்கு பிறகு பிரதமர் மோடி முதல்முறையாக இப்படி ஒரு கருத்தை கட்சியினரிடம் வெளிப்படுத்தி உள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் இரு சமூகத்தினருக்கு இடையிலான வன்முறையாக மாறியது.
ஆயுதம் ஏந்திய 2000க்கும் மேற்பட்ட குண்டர்கள், கடைகள், வீடுகள், பள்ளிகள், வாகனங்கள் என கண்ணில் பட்டதை எல்லாம் அடித்து நொறுக்கி தீவைத்து எரித்தனர். இந்த வன்முறையில் 40க்கும் மேற்பட்ட மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ராஜ்யசபா எம்.பி. கனவில் கே.எஸ். அழகிரி, பீட்டர் அல்போன்ஸ், ஈவிகேஎஸ் இளங்கோவன்
பொதுமக்கள் புகார்
டெல்லி வன்முறையை தடுக்க வேண்டிய போலீசார் வன்முறையை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்ததாக புகார்கள் எழுந்தது. போலீஸ் கண்முன்னே பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், பலர் மோசமாக தாக்கப்பட்டதாகவும் உதவாமல் அவர்கள் வேடிக்கை பார்த்ததாகவும் ஏராளமானோர் ஊடகங்களின் நேர்காணல்களில் குற்றம் சாட்டினார்.
எப்ஐஆர் பதிவு செய்ய
இதனிடையே டெல்லி வன்முறைக்கு பாஜக தலைவர்கள் கபிஸ் மிஸ்ரா (எம்பி0, அனுராக் தாகூர் (மத்திய அமைச்சர்), பர்வேஷ் வர்மா (எம்எல்ஏ) ஆகியோரின் பேச்சுக்களே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இவரது பேச்சுக்கள் வன்முறையை தூண்டியதாகவும் இவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
எதிர்க்கட்சிகள் நெருக்கடி
டெல்லி வன்முறையில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில், இதுபற்றி பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன் என்று விமர்சனங்கள் எழுந்தது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அமைதி காத்தது ஏன் என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதனிடையே எதிர்க்கட்சிகள் நேற்று நாடாளுமன்றத்தில் அமித்ஷாவை பதவி விலக வலியுறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டனர். டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்தனர்.
அமைதி நல்லிணக்கம்
இந்நிலையில் டெல்லி வன்முறை குறித்து. பிரதமர் நரேந்திர மோடி மௌனம் கலைத்துள்ளார். இன்று காலை பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை குறித்து பேசினார், இந்த மூன்று தான் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் என்று கூறிய பிரதமர். இதுவே பாஜகவின் "மந்திரம்" என்று வர்ணித்தார்.நாடு முழுவதும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையுடன் இருப்பதை பாஜக தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் இருந்த எம்பிக்களிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
எம்பிக்களிடம் அறிவுறுத்தல்
"நாட்டின் வளர்ச்சிக்கு அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை அவசியம், ஆனால் சிலர் தங்கள் கட்சிகளுக்காக வாழ்கின்றனர். நாங்கள் நாட்டிற்காக வாழ்கிறோம்," என்று பிரதமர் மோடி எம்பிக்கள் கூட்டத்தில் பேசினார். 'பாரத் மாதாகி ஜே' என்ற வாசகம் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அண்மையில் கூறியிருந்தார். இதையடுத்து மறைமுகமாக அவர் பெயரை குறிப்பிடாமல், சிலர் பாரத் மாதாகி ஜே என்று சொல்வதற்கு கூட தயங்குகிறார்கள் என்று பிரதமர் மோடி விமர்சித்தார்.