பாஜக அரசின் மைல்கல் திட்டம்... விவசாயிகளுக்கு வரமாக வந்த குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்கை!
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி அரசு 2022ற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்று உறுதிமொழி எடுத்து, மத்தியில் ஆளும் பாஜக அரசு அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கடந்த மாதம் மத்திய அரசு விவசாயிகளுக்கான குளிர்கால பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்தது. விளைச்சலுக்கு ஆன செலவை விட 50 சதவிகிதம் கூடுதல் வருவாய் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டது.
2016 -17 மற்றும் 2017 -18 காலத்தில் அறுவடை காலத்தில் பயிர்களுக்கு குறைந்த விலையே உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு வருமானம் குறைந்ததால் விவசாயிகள் இழப்பீடு தொகை மற்றும் கடன் தள்ளுபடி கேட்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதத்தில் 14 காரிப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையானது உயர்த்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் பயிரிடுவதற்கு செலவு செய்ததை விட 50 சதவிகிதம் கூடுதல் வருவாய் ஈட்டுவதை உறுதி செய்வதற்காக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மத்திய அரசு ஒரு புதிய விலை ஆதரவு கொள்கைளை அறிவித்துள்ளது. பருப்பு மற்றும் எண்ணெய் விதைகளை பயிரிடும் விவசாயிகள் குறைந்த ஆதரவு விலை திட்டத்தின் கீழ் பயன்பெறுகிறார்கள் என்பதை உறுதி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது தான் பிரதம மந்திரியின் ஆஷா திட்டம்.
மனித உயிர்கள் வாழ அடிப்படை தேவை உணவு, ஏறத்தாழ இந்தியாவில் உள்ள 132 கோடி மக்களக்கு உணவளிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. நம் நாட்டின் விவசாயிகள் களைப்பின்றி உழைப்பதாலேயே நாம் உணவு பற்றிய கவலையில்லாமல் அன்றாட பணிகளில் ஈடுபட முடிகிறது. இந்தியாவின் மொத்த பணிப்பளூவில் விவசாயம் 50 சதவிகிதத்தை கொண்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த சமூக பொருளாதாரத்தில் விவசாயம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
[தபால் நிலையங்கள் மூலம் பண பரிமாற்றம்.. மத்திய அரசின் புதிய திட்டம்!]
பிரேசில், சீனா போன்ற நாடுகள் விவசாயத்துறையில் உயர்வை கண்டுவருகின்றன. மக்கள் தொகையில் வளர்ச்சி கண்டு வரும் நாட்டில் விவசாயத் துறையையும் அதற்கேற்ப முன்னேற்றுவது அவசியமான ஒன்று. அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் இந்தியாவில் மக்கள் தொகைக்கு ஏற்ப கோதுமை மற்றும் அரிசியை உற்பத்தி செய்ய முடியும் என்றும் கூடவே ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மொத்த விலை சந்தையின் ஏற்ற இறக்கம், விவசாயப் பொருட்கள் விலையில் இருக்கும் நிலையற்ற தன்மையில் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு மாற்றத்தை கொண்டு வரப்போகிறது. சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட பயிரின் விலை மொத்தவிலை சந்தையில் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும், இதனால் விவசாயிக்கு உற்பத்திக்கான விலையை கூட கொடுக்க முடியாத நிலை ஏற்படும். குறைந்த ஆதரவு விலையானது திடீர் வீழ்ச்சியை கட்டுப்படுத்தி சந்தையில் சரியான விலையை நிர்ணயம் செய்ய உதவும்.
இந்தியாவில் உள்ள விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் சவால் உற்பத்தி பொருள் மூலம் நல்ல வருவாயை ஈட்ட முடிவதில்லை, விவசாயத்தின் மூலம் ஈட்டும் வருமானம் அவர்களின் வாழ்க்கை நிலையை மாற்றுவதில்லை என்பதாகவே உள்ளது. உண்மையான விவசாயி இன்னும் ஏழையாகவே இருக்கிறார் காலை முதல் மாலை வரை வயலை உழுவதிலேயே அவருடைய பொழுது கழிந்து கொண்டிருக்கிறது.
விவசாயத்துறைக்கு பட்ஜெட்டில் 13 சதவிகிதம் நிதி உயர்த்தப்பட்டு 2018 -19 நிதியாண்டில் ரூ. 58,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, இது 2017-18ம் நிதியாண்டில் ரூ. 51,576 கோடியாக இருந்தது. 2009 முதல் 2014 வரையிலான காலகட்டத்தை விட 2014 - 19 நிதியாண்டில் 74.5% பட்ஜெட்டில் நிதி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.1,21,082 கோடியில் இருந்து ரூ. 2,11,694 கோடி. விவசாய வருவாய்க்கான இலக்கு 2018 - 19ல் ரூ. 11 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது 2017-18ம் ஆண்டில் இது ரூ. 10 லட்சமாக இருந்தது.
மத்தியில் ஆளும் பாஜக அரசால் விவசாயிகளுக்கு ஏராளமான நல்ல விஷயங்கள் செய்யப்பட்டுள்ளன, எனினும் விவசாயின் வாழ்நிலையை மாற்ற இன்னும் பல மாற்றங்களை கொண்மு வர வேண்டியுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை அவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு வழி. கொள்கைகளை வகுப்பவர்கள் விவசாய உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் இயந்திரங்கள் முறையில் செய்யும் விவசாய முறைக்கு மாறவும், தரமான விதைகளைப் பெறவும் உதவும் வகையிலான திட்டங்களை அமைக்க வேண்டும்.