'குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு தனிக்குழு அமைக்கப்படும்.. மத்திய அரசு அறிவிப்பு.. விவசாயிகள் பதில் என்ன
டெல்லி: குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) முறையை வெளிப்படையானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற விரைவில் குழு அமைக்கப்படும் என்பதால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என மத்திய விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்தாண்டு மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் ஓர் ஆண்டாகத் தொடர்ந்தது.
கோவையில் ரயில் மோதி.. 3 யானைகள் உயிரிழந்த விவகாரம்.. ரயில் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
பல மாதங்களாக விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்த போதிலும், மத்திய அமைச்சர்கள் பலரும் விவசாய தலைவர்களும் வேளாண் சட்டம் கண்டிப்பாகத் திரும்பப் பெறப்படமாட்டாது எனத் தொடர்ந்து பேசி வந்தனர்.
விவசாய சட்டங்கள் வாபஸ்
இந்தச் சூழலில் குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது நாட்டு மக்களிடையே மன்னிப்பு கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும், விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இருப்பினும், குறைந்தபட்ச ஆதரவு விலை, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மீது நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்த விவசாயிகள் அதுவரை போராட்டங்கள் தொடரும் என அறிவித்தனர்.
அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
இந்நிலையில், இது குறித்து மத்திய விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், "குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) முறையை வெளிப்படையானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றப் பிரதமர் மோடி குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த குழு அமைக்கப்பட்டால் MSP குறித்த விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும். இந்தக் குழுவில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் இருப்பார்கள்.
போராட்டத்தை முடிக்க வேண்டும்
மத்திய அரசு மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்து விட்டது. இதன் பின்னரும் கூட விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்வதில் எந்தப் பயனும் இல்லை. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு வீடுகளுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
விவசாய கழிவுகள்
அதேபோல மின்சாரத் திருத்த மசோதா, விவசாயிகளுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளைத் திரும்பப் பெறுதல், டெல்லி சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய கழிவுகளை எரித்தால் அபராதம் விதிக்கும் சட்டம் ஆகியவற்றை நீக்கும்படியும் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்து அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், "விவசாய கழிவுகளை எரிப்பதை குற்றவியல் நடவடிக்கையாகக் கருதக் கூடாது என விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இந்தக் கோரிக்கையை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது" என்றார்,
விவசாயிகள் கூறுவது என்ன
இருப்பினும், அமைச்சர் நரேந்திர சிங்க தோமரின் வாதத்தை விவசாயச் சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "மத்திய அரசு, முதலில் எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளைத் தீர்க்க விவசாய தலைவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்றனர்.
குறைந்தபட்ச ஆதரவு விலை
அதேபோல பாரதிய கிசான் யூனியன் தலைவர் குர்னாம் சிங் சாருனி இது குறித்துக் கூறுகையில், "எங்களுக்கு இன்னும் தெளிவு தேவை. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான குழு எப்போது அமைக்கப்படும்? MSPஐ மத்திய அரசு எப்போது சட்டமாக்கும்? இதற்கெல்லாம் எங்களுக்கு விடைகள் தேவை. எங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும். அப்போது தான் போராட்டத்தை வாபஸ் பெற முடியும்" என்று அவர் தெரிவித்தார்.