கண் பார்வையை பறிக்கும்.. உயிருக்கும் உலை வைக்கிறது.. குஜராத், மும்பையில் தீவிரமாக பரவும் பூஞ்சை நோய்
டெல்லி: ஒரு பக்கம் நாடு முழுக்க கொரோனாவை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அகமதாபாத் உள்ளிட்ட குஜராத் மாநிலத்தின் சில பகுதிகளில், அரிய வகை நோய் பரவல் அச்சுறுத்தி வருகிறது.
மியூகோமிகோசிஸ், என அழைக்கப்படும் ஒரு அரிய ஆனால் கொடிய பூஞ்சை வகை நோயால் இதுவரை 44க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 9 பேர் பலியானது பெரிய சோகம்.
சுற்றுச்சூழலில் கலந்து இருக்கும் ஒரு வகை, பூஞ்சைகளால் மியூகோமிகோசிஸ் நோ்ய பரவுகிறது. மூக்கு வழியாகத்தான் இந்த கிருமி கண்கள் உள்ளிட்ட உடலின் பிற பகுதிகளுக்கு பரவ ஆரம்பிக்கிறது.
கண் பார்வை
உடனடியாக கண்டுபிடித்து சிகிச்சையளித்தால், நோயாளியை காப்பாற்றி விடலாம். கண்டுகொள்ளாமல் விட்டால், இது உயிரைக் கொல்லும் அளவுக்கு மோசமான வியாதியாகும். இந்த நோய்த் தொற்று பரவும்போது, கருவிழியை சுற்றியுள்ள பகுதிகளை செயல்படவிடாமல் தடுக்கும், இதனால் கண் பார்வை பறிபோக வாய்ப்பு உள்ளது. இந்த கிருமி, மூளைக்குச் செல்லும்போது மூளையை செயல்படவிடாமல் தடுத்துவிடும் ஆபத்து உள்ளது.
கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் உஷார்
பொதுவாக இந்த வியாதி ஏற்கனவே பல பிரச்சினைகளால் மருந்து சாப்பிடுவோருக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போருக்கும் எளிதாக பரவுகிறது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு இந்த நோய் பரவினால் ஆபத்து.
இணை நோயாளிகள்
நீரிழிவு உள்ளிட்ட பிற உடல் பிரச்சினை உள்ளவர்களுக்கும் இந்த நோய் ஆபத்தானது. அகமதாபாத் மருத்துவமனைக்குச் சென்ற பல நோயாளிகள் நீரிழிவு உள்ளவர்கள் அல்லது கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எனத் தெரிகிறது. மூக்கு பகுதி வீங்கியிருந்தாலோ, வலி இருந்தாலோ, கண் பார்வை மங்கலானாலோ உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
குஜராத், டெல்லி, மும்பை
டெல்லியில் 2 நாட்கள் முன்பு மியூகோமிகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 12 பேர் சிகிச்சைக்கு சேர்ந்தனர். மும்பையிலும் கேஸ்கள் பதிவாகின. அகமதாபாத்தில் 44 கேஸ்கள் பதிவாகியுள்ளன. அகமதாபாத்தில் சிகிச்சை பெற்றதில் 9 நோயாளிகள் பலியாகியுள்ளனர்.
உஷார் மக்களே
50 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் மியூகோமிகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக அகமதாபாத் பொது மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை நிபுணத்துவ டாக்டர் குழு தலைவர் பீலா பிரஜாப்கி தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால், இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் நோய் என்று அவர் எச்சரித்தார்.
தப்பிப்பது எப்படி?
எப்போதும் சுகாதாரத்தை காக்க வேண்டும். கைகளில் அடிக்கடி சோப்பு போடுவது, வெளியே போகும்போது சானிட்டைசர் பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்துவது, முகக் கவசத்தை பொது இடங்களில் எப்போதும் அணிவது, கண்கள், மூக்குகளை தொடாமல் தவிர்ப்பது உள்ளிட்டவை இந்த நோயிலிருந்து நம்மை காக்க உதவும்.