இப்படித்தான் நடக்கும் என்று அன்றே தமிழக அரசுக்கு சொன்னோம்.. கேட்டால்தானே.. முகிலன் ஆவேசம்
Recommended Video
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளதற்கு அந்த ஆலை எதிர்ப்பாளர் முகிலன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதால் அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.
திட்டவட்டம்
பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.
விசாரணை
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தமிழக அரசு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. அப்போது ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த மனுவை பசுமைத் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.
எதிர்பார்த்த ஒன்று
இதுகுறித்து ஸ்டெர்லைட் போராட்டக் குழுவைச் சேர்ந்த முகிலன் கூறுகையில் ஸ்டைர்லைட் ஆலை திறப்பு குறித்த பசுமைத் தீர்ப்பாய கருத்துக்கு அதிருப்தி அளிக்கிறது. இது நடக்கும் என்பது எதிர்பார்த்தது.
ஏமாற்றம்
இப்படித்தான் நடக்கும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டபோதே கூறியிருந்தோம். சர்வதேச நீதிமன்றத்துக்கு சென்றாலும் கூட இந்த ஆலை திறக்கப்பட மாட்டாது என தமிழக அரசு மக்களை ஏமாற்றியது இன்று அம்பலமாகியுள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு சென்றாலும் இந்த தீர்ப்புதான் வரும். ஏனெனில் இதுபோன்ற ஆலைகளை கொண்டு வருவதுதான் இந்திய அரசின் கொள்கை.
அவமானம்
1990-களில் கொண்டு வரப்பட்ட உலகமயம், கொள்கைமயம், தாராளமயம் கொள்கைபடி இதுபோன்ற நாசக்கார ஆலைகள் வரத்தான் செய்யும். ஸ்டெர்லைட் ஆலை கிரிமினல் ஆலை. சாதாரணமாக ஒருவரை சாதியை சொல்லி திட்டிவிட்டாலோ அல்லது அவமானப்படுத்திவிட்டாலோ அவரை கைது செய்து விடுகிறார்கள்.
தொடர்ந்து வலியுறுத்தல்
ஆனால் ஸ்டெர்லைட் ஆலை திட்டமிட்டு ஒரு கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு 13 பேர் படுகொலைக்கு காரணமாகியுள்ளது. இந்த ஆலை இயக்குவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. அது மட்டுமல்ல மக்கள் மன்றத்தில் இந்த ஆலை இயங்கக் கூடாது என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என்றார் முகிலன்.