அப்பா பிரதமரானால் நல்லாதான் இருக்கும்.. அகிலேஷ் யாதவ் திடீர் ஆசை.. மாயாவதிக்கு அதிர்ச்சி
டெல்லி: எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் பிரதமர் வேட்பாளருக்கு நிறைய போட்டி. இப்போது இந்தப் போட்டியில் முலாயம்சிங் யாதவும் சேர்ந்து கொண்டுள்ளார்.
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அளித்த பேட்டியில், தனது தந்தை முலாயம் சிங் யாதவுக்கு, பிரதமர் பதவி கொடுக்கப்படுவது, அவருக்கு தரப்படும் உரிய கௌரவம் என்று தெரிவித்துள்ளார்.
ஏன்என்ஐ, செய்தி நிறுவனத்திற்கு இன்று அகிலேஷ் யாதவ் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ராகுல், பிரியங்கா காந்தியை வெளுவெளுவென வெளுத்த அகிலேஷ் யாதவ்!
முலாயம் சிங் யாதவ்
அடுத்த பிரதமர் வேட்பாளராக முலாயம்சிங் யாதவ், முன்னிறுத்தப்படுவாரா என்ற கேள்விக்கு, பதில் அளித்துள்ளார் அகிலேஷ் யாதவ். பிரதமர் பதவி முலாயம் சிங் யாதவுக்கு கொடுக்கப்படுவது உரிய கௌரவம் அளிப்பதாகும். ஆனால் முலாயம் சிங் யாதவ் பிரதமருக்கான போட்டியில் இல்லை என்றே கருதுகிறேன் என்று தெரிவித்தார் அகிலேஷ்.
மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது சமாஜ்வாதி. தங்கள் கூட்டணி சார்பில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை, பிரதமர் பதவிக்கு முன்மொழிந்திருந்தார் அகிலேஷ் யாதவ். மெகா கூட்டணிதான் (மகாகட்பந்தன்) இந்தியாவுக்கு அடுத்த பிரதமரை அளிக்கப் போகிறது என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்.
புது சர்ச்சை
எனது சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இருந்து பிரதமர் கிடைத்தால் மிகுந்த மகிழ்ச்சி என்று மாயாவதியை, மறைமுகமாகக் குறிப்பிட்டு சொல்லியிருந்தார் அகிலேஷ் யாதவ். இந்த நிலையில் முலாயம் சிங் யாதவுக்கு பிரதமர் பதவி கொடுப்பது நல்ல கௌரவமாக இருக்கும் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளது, கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அம்பையர் சந்திரபாபு நாயுடு
இதனிடையே ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான, சந்திரபாபு நாயுடு கூறுகையில், தேர்தல் முடிவடைந்த பிறகு, எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து ஆலோசிக்கலாம் என்று தெரிவித்தார். இதன் மூலம், தான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை என்பதை சந்திரபாபு நாயுடு தெளிவுபடுத்திவிட்டார்.