அவரும் இல்லை.. இவரும் இல்லை.. ஏ.பி. முருகானந்தம்தான் அடுத்த தமிழக பாஜக தலைவரா?
Recommended Video
டெல்லி: அப்பாடா... ஒருவழியாக தமிழக பாஜக தலைவர் நியமிக்கப்பட உள்ளார். புதிய மாநில தலைவராக ஏ.பி.முருகானந்தம் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், திடீரென அமித்ஷா அழைப்பினை ஏற்று முருகானந்தம் டெல்லி சென்றிருக்கிறார்.
தமிழிசை தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றதில் இருந்தே, தமிழக தலைமை பதவிக்கு பலமான போட்டி இருந்தது. குறிப்பாக, எச். ராஜா, முருகானந்தம், சி.பி ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீநிவாசன் ஆகியோர் இடையில்தான் இந்த போட்டி அதிகமாகவே இருந்தது.
இவர்கள் எல்லாருமே பாஜக தலைமைக்கு முக்கியமானவர்கள்தான். அதனால் யாரை தேர்ந்தெடுப்பது என்று ரொம்பவே குழம்பி போனது. அதிலும், எச். ராஜாவும், சிபி ராதாகிருஷ்ணனுக்கும் இடையே இவ்வளவு காலம் இல்லாமல், இந்த சமயத்தில் நடந்த போட்டி வெளிப்படையாகவே தெரிந்தது. 2 பேருமே டெல்லியில் பதவிக்காக பேசி வருவதாகவும் செய்திகள் வெளியானது.
சிபி ராதா
"நான், தேசிய அளவில் முக்கியமானவன், எனக்கு தமிழ்நாட்டில் எல்லாரையும் தெரியும்" என்று எச்.ராஜா சொல்ல.. "நான் எதிர்கட்சிகளை அனுசரித்து போகக்கூடியவன், கூட்டணிகளை உருவாக்க என்னால் முடியும்" என்று சிபி ராதா சொல்ல.. தலைமை ஏகத்துக்கும் குழம்பி போய்விட்டது. இதற்கு நடுவில் ஒரு கட்டத்தில் வானதி ஸ்ரீனிவாசனுக்கு ட்விட்டர்வாசிகள் புதிய தலைவருக்கான வாழ்த்துக்களையே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
இளைஞரணி
இந்த ஜாம்பவான்களுக்கு இடையில் அடிபட்ட பெயர்தான் முருகானந்தம்... கோவை மாவட்டத்தை சேர்ந்தவர். பாஜகவின் அகில இந்திய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்.. இளைஞரணியின் தேசிய துணை தலைவர். புதுமுகம் ஒருவரை தலைவராக நியமிக்கலாம் என்பதுதான் பாஜக தலைமையின் ஆரம்பம் முதலே இருக்கும் விருப்பம். அந்த விருப்பத்துக்கும் பொருத்தமானவராக முருகானந்தம் கருதப்படுவதாக தெரிகிறது.
பரிந்துரைகள்
அதனால்தான், இவரையே பாஜக தலைவராக நியமிக்கப்படுவதற்கான பரிந்துரைகளும் ஏற்கனவே அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தன. அது மட்டும் அல்ல.. நாடு முழுவதும் பாஜக நடத்திய வலுவான போராட்டங்களில் களப்பணி மேற்கொண்டவர் முருகானந்தம். அதனால், மோடிக்கும் அமித் ஷாவுக்கும் ரொம்பவே நெருக்கமானவர்.
டெல்லி
ஆனால் என்னமோ தெரியவில்லை.. இடைப்பட்ட நாட்களில் இந்த தலைவர் பதவிக்கான பரபரப்பு குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், அமித்ஷா டெல்லிக்கு திடீரென முருகானந்தத்தை வரவழைத்துள்ளார். அவரது அழைப்பினை ஏற்று முருகானந்தமும் டெல்லிக்கு சென்றிருக்கிறார். அநேகமாக பாஜக தலைவராக நியமிப்பது பற்றி முருகானந்தம் கருத்தை கேட்க அமித்ஷா முடிவு செய்ய உள்ளார் என தெரிகிறது.
அமித்ஷா
இப்போது, மாநில பாஜக துணை தலைவராக இருந்து வரும் முருகானந்தம், விரைவில் தலைமை பொறுப்புக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை முருகானந்தம் தேர்வானால், வாய்ப்பு கேட்டு லிஸ்ட்டில் உள்ள மற்றவர்கள் நிலை என்னாகும், எந்த மாதிரியான நிலைப்பாட்டை, முடிவை எடுப்பார்கள் என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.