தடைகள் நீங்கியதில் மகிழ்ச்சி.. ராமர் கோயில் கட்ட ரூ 5 லட்சம் வழங்கும் முஸ்லிம் அமைப்புகள்
டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ 5 லட்சத்தை அன்பளிப்பாக அளிப்பதாக அஸ்ஸாமில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் அறிவித்துள்ளன.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலமான 2.77 ஏக்கர் யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக வழக்கும் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இது தொடர்பான தீர்ப்பு கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்டது. அப்போது சர்ச்சைக்குரிய நிலமான 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தீர்ப்பு
அத்துடன் அயோத்தியில் முஸ்லிம்கள் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை மாநில அரசும் மத்திய அரசும் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் இந்த தீர்ப்பை சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்த்தன.
ராமர் கோயில்
அயோத்தி வழக்கில் முக்கிய அமைப்பான முஸ்லிம் தனி நபர் சட்ட ஆணையம், அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 21 முஸ்லிம் அமைப்புகள் இணைந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ 5 லட்சத்தை அன்பளிப்பாக அளிப்பதாக அறிவித்துள்ளன.
சுப்ரீம் கோர்ட்
இதுகுறித்து 21 அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் ஜனகோஸ்தியா சம்மான்னே பரிஷத்தின் நிர்வாகி கூறுகையில் ராமர் கோயில் கட்டுவதற்கான அனைத்து தடைகளையும் வரலாற்றுத் தீர்ப்பு மூலம் சுப்ரீம் கோர்ட் கலைந்துவிட்டது. இதை நாங்கள் வரவேற்கிறோம். அஸ்ஸாமில் மொத்தம் 21 அமைப்புகள் உள்ளன. அவற்றை ஒருங்கிணைப்பது ஜனகோஸ்தியா சம்மான்னே பரிஷத் என்ற அமைப்பு ஆகும்.
நல்லிணக்கம்
ராமர் கோயில் கட்ட இந்த அமைப்பு சார்பில் ரூ 5 லட்சம் வழங்கப்படும் என்றார். அது போல் பாஜக மூத்த செய்தித் தொடர்பாளரும் ஜேஎஸ்பிஏ கட்சியின் தலைவருமான சையது முமிநுல் அவால் கூறுகையில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வரவேற்கிறோம். ராமர் கோயில் கட்டுவது என்ற முடிவில் எங்களுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அதுதான் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் என்றார்.