அயோத்தியில் ராமர் கோவிலை முஸ்லிம்களும் இணைந்து கட்ட வேண்டும்: இளவரசர் யாகூப் ஹபீபுதீன் டுசி
நொய்டா: அயோத்தியில் ராமர் கோவிலை முஸ்லிம்களும் இணைந்து கட்ட வேண்டும் என்று கடைசி மொகலாய மன்னர் பகதூர் ஷா ஜாபரின் வாரிசுகளில் ஒருவரான இளவரசர் யாகூப் ஹபீபுதீன் டுசி தெரிவித்துள்ளார்.
அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து யாகூப் ஹபீபுதீன் டுசி கூறியதாவது:
உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. ஒவ்வொருவரும் இத்தீர்ப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோவிலை இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து கட்ட வேண்டும். அதுதான் இந்த உலகின் முன்பாக மதச்சார்பின்மைக்கும் மதங்களுக்கு இடையேயான சகோதரத்துவத்துக்கும் எடுத்துக்காட்டாக திகழும்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான தங்க செங்கல் தருவேன் என்ற உறுதிமொழியில் நான் உறுதியாக இருக்கிறேன். அயோத்தியில் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் போது பிரதமர் மோடியிடம் இந்த தங்க செங்கல்லை தருவேன்.
இவ்வாறு யாகூப் ஹபீபுதீன் டுசி கூறினார்.