ஓரமா போய் உட்காருங்க.. ரூ. 1 லட்சம் அபராதம் கட்டுங்க.. நாகேஸ்வர ராவுக்கு சுப்ரீம் கோர்ட் தண்டனை
நீதிமன்றத்தை அவமதிப்பு செய்தது தொடர்பான வழக்கில் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவிற்கு சுப்ரீம் கோர்ட் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
Recommended Video
டெல்லி: நீதிமன்றத்தை அவமதிப்பு செய்தது தொடர்பான வழக்கில் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவிற்கு சுப்ரீம் கோர்ட் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அதேபோல் இன்றுமாலை வரை அவர் உச்ச நீதிமன்றத்தில் ஹாலில் ஓரமாக உட்கார்ந்து இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது .
சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ் மீது உச்ச நீதிமன்றம் மிக கடுமையான கோபத்தில் இருந்தது. பீகாரில் அரசுக்கு சொந்தமான குழந்தைகள் காப்பக வழக்கில் உச்ச நீதிமன்றம் நாகேஸ்வர ராவிடம் கடுமையான கேள்விகளை எழுப்பி இருந்தது.
பீகாரில் அரசுக்கு சொந்தமான குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளை சிலர் கொடூரமாக வன்புணர்வு செய்ததாக வழக்கு இருக்கிறது. இதில் சில பாஜகவினருக்கும் தொடர்பு உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
என்ன மாதிரியான உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் ஏகே சர்மாவை பணியிட மாற்றம் செய்ய கூடாது என்று பாட்னா ஹைகோர்ட் உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது. உச்ச நீதிமன்றமும், இந்த அதிகாரியை பணியிட மாற்றம் செய்ய தடைவிதித்தது . ஆனால் கடந்த ஜனவரி 17ம் தேதி நாகேஸ்வர ராவ், சர்மாவை சிபிஐ அமைப்பில் இருந்து இட மாற்றம் செய்தார். சிஆர்பிஎஃப் துறைக்கு இவர் மாற்றப்பட்டார்.
கடுமையான கேள்வி
இந்த பணியிட மாற்றத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில்தான் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அமர்வு மிக கோபமான கேள்விகளை கேட்டு இருந்தது. நீதிமன்றத்தின் உத்தரவில் நாகேஸ்வர ராவ் விளையாடியது தெரிந்தால்...நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்.. கடவுள்தான் உங்களை காப்பாற்ற வேண்டும், என்று கோபமாக கூறி இருந்தனர்.
மன்னிப்பு கடிதம்
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஏற்கனவே நாகேஸ்வர ராவ் மன்னிப்பு கேட்டு உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். தவறுதலாக பணியிட மாற்றம் நடத்துவிட்டதாக அவர் விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் வழக்கில் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இன்று அவர் மன்னிப்பு கேட்டார்.
கடும் கேள்வி
ஆனால் சிபிஐ அதிகாரி நாகேஸ்வர ராவின் மன்னிப்பை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
இதில் நீதிமன்றம், நாகேஸ்வர ராவ் குற்றம் செய்துவிட்டார். இது அவரின் பணி வரலாற்றில் இடம்பெறும். அவருக்கு ஆதரவாக ஏன் மத்திய அரசு வழக்கறிஞர் வாதாடுகிறார். அவர் நீதிமன்றத்தையே அவமதித்து இருக்கிறார். அவருக்கு தனி வக்கீல் நியமித்துக் கொள்ளட்டுமே.
விளக்கம்
இதையடுத்து மத்திய அரசின் வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால், நாகேஸ்வர ராவ் செய்த தவறு, தெரியாமல் நடந்தது. அவரை மனிதாபிமானம் கருதி மன்னிக்க வேண்டும். அவர் 32 வருடம் கடுமையாக பணியாற்றி இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது, என்றார்.
வேண்டும்
நாகேஸ்வர ராவ் தான் செய்த குற்றத்திற்கு தண்டனையை அனுபவித்து ஆக வேண்டும். சிபிஐ அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தை அவமதித்ததை ஏற்க முடியாது. இதையடுத்து நீதிபதிகள், நாகேஸ்வர ராவ் செய்தது முழுக்க முழுக்க தவறு. அவர் செய்ததை எப்போதும் ஏற்க முடியாது, என்று நீதிபதிகள் கூறினார்கள்.
என்ன தீர்ப்பு
இதையடுத்து தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அமர்வு, சிபிஐ அதிகாரி நாகேஸ்வர ராவ் செய்தது குற்றம்தான். நாகேஸ்வர ராவ் ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். இன்று மாலை வரை கோர்ட் அறையில் அமர்ந்திருக்க வேண்டும், என்று உத்தரவு பிறப்பித்தது.