நான் எழுப்பிய கலகக் குரல் சுயமரியாதைக்கானது.. கட்சி பதவிக்காக அல்ல.. அடேங்கப்பா சச்சின் பைலட்
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் தாம் கலகக் குரல் எழுப்பியதே சுயமரியாதைக்காகத்தானே தவிர பதவிகளுக்காக அல்ல என்று ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா உள்ளிட்டோரை சச்சின் பைலட் சந்தித்து பேசினார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவையும் பைல்ட் கோஷ்டி சந்தித்தது.
இச்சந்திப்புகளுக்குப் பின்னர் பைலட் கோஷ்டியின் குறைகளை களைய மூவர் குழுவை சோனியா காந்தி அமைத்தார். இதனை வரவேற்ற சச்சின் பைலட் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியில் கொள்கை ரீதியாகத்தான் நான் குரல் கொடுத்தேன். எனது குரல் என்பது பதவிகளைப் பெறுவதற்காக அல்ல. சுயமரியாதைக்கான போராட்டம்தான் எங்களது கலகக் குரல்.
ராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு
கட்சியில் தனிப்பட்ட பிரச்சனைகளை கொண்டுவரக் கூடாது. ராஜஸ்தானில் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் போராடி ஆட்சியை அமைத்திருக்கிறோம். சோனியா காந்தி அமைத்திருக்கும் மூவர் குழுவை வரவேற்கிறோம்.
நாங்கள் எழுப்பியிருக்கும் பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு சச்சின் பைலட் கூறினார்.