வந்த வேலை முடிந்தது.. லோக்சபா தேர்தல் முடிந்த மறுநாளே சேவை நிறுத்தப்பட்ட நமோ சேனல்!
லோக்சபா தேர்தல் நடக்கும் நேரத்தில் இயங்கி வந்த நமோ சேனல் ஒளிபரப்பு தற்போது திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி: லோக்சபா தேர்தல் நடக்கும் நேரத்தில் இயங்கி வந்த நமோ சேனல் ஒளிபரப்பு தற்போது திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நேற்று மாலைதான் தேர்தல் முடிந்தது. கடந்த ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் தொடங்கியது. வரிசையாக 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலின் போது பாஜக தேர்தல் விதிகளை மீறுவதாக நிறைய புகார்கள் வைக்கப்பட்டது.பிரதமர் மோடி விதிகளை மீறி பேசுகிறார் என்று நிறைய புகார்கள் வைக்கப்பட்டது. அதே போல் நமோ சேனல் மீதும் நிறைய புகார்கள் வைக்கப்பட்டது.
நமோ சேனல் மார்ச் 23ம் தேதி தொடங்கப்பட்டது. பாஜகவின் ஐடி விங் மூலம் இது இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது தேர்தல் விதிமீறல் என்று இந்த சேனலுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டது.
அதற்கு டிஷ் நிறுவனங்கள், இது இலவச சேனல், விளம்பர நோக்கிற்காக இருக்கிறது. இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது விளம்பர சேனல் என்பதால் இதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறியது. இதற்கு எதிராக காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம், நமோ சேனல் அரசியல் தொடர்பான நிகழ்வுகளை ஒளிபரப்ப தடை விதித்தது. ஆனாலும் நமோ சேனல் மோடியின் பயணங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை ஒளிபரப்பி வந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது .
இந்த நிலையில் நமோ சேனல் ஒளிபரப்பு தற்போது திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் இயங்கி வந்த நமோ சேனல் திடீர் என்று நிறுத்தப்பட்டுள்ளது. இது தேர்தல் முடிந்து சரியாக 24 மணி நேரத்தில் நிறுத்தப்பட்டது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
விளம்பர சேனலாக ஒளிபரப்பான நமோ சேனல் என் கொண்டு வரப்பட்டது, ஏன் நிறுத்தப்பட்டது என்பது பெரிய சர்ச்சையை உருவாக்கி உள்ளது.