8 மணிக்கு டிவியில் உரையாற்றப் போகும் மோடி.. ஏடிஎம் மையங்களில் குவிந்த மக்கள்.. நாடு முழுக்க பரபரப்பு
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு, தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் உரையாற்ற போவதாக அறிவித்துள்ளார்.
மோடியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஏடிஎம் மையங்களை நோக்கி படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் தகவலில், "பிரதமர் நரேந்திர மோடி, இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
பணமதிப்பிழப்பு
அவர் எதைப் பற்றி உரையாற்றுவார் என்ற தகவல் எதுவும் அதில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் மக்கள் மத்தியில் பல்வேறு யூகங்கள் தொடங்கியுள்ளன. 2016-ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி திடீரென இரவு தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் மோடி, அப்போது புழக்கத்தில் இருந்த, ஐநூறு, ஆயிரம் போன்ற உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். எனவே, ஏடிஎம்களில் இரவு நேரத்திலும், மக்கள் கூட்டம் அலைமோதியது. அதன் பிறகு, பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு, அதில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப சுமார் ஒரு வருட காலம் ஆனது.
ஏடிஎம்கள்
பிரதமர் தொலைக்காட்சியில் தோன்றுவதாக, அறிவிப்பு வெளியானதுமே, பலருக்கும் பணமதிப்பிழப்பு தொடர்பான கசப்பான அனுபவங்கள் மனதில் நிழலாட தொடங்கிவிட்டன. இதனால்தான் ஏடிஎம் மையங்களை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் வழக்கத்தைவிட ஏடிஎம் மையங்களில் மதியம் முதல் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது, என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிஷன் சக்தி
ஆனால், இப்படித்தான் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி திடீரென தொலைக்காட்சியில் தோன்றி, நாட்டு மக்களிடம் உரையாற்ற போவதாக மோடி அறிவித்தார். அப்போதும் மக்கள் ஏடிஎம் மையங்களை நோக்கி ஓடினர். ஆனால் மிஷன் சக்தி என்ற ஏவுகணை தொழில்நுட்ப வெற்றி தொடர்பான அறிவிப்பை அப்போது மோடி வெளியிட்டார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது, மோடி இவ்வாறு ஒரு பேட்டி அளித்தது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.
காஷ்மீர் விவகாரம்
இந்த நிலையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாகத்தான் இன்று மோடி நாட்டு மக்களிடம் விளக்கம் அளிப்பார் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருளாதாரம் தற்போது உள்ள மந்த நிலையில், பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளை மோடி அரசு எடுப்பது மிகவும் அரிது என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள். பொறுத்திருந்து பார்க்கலாம்.