பதிலடிக்கு ஆயத்தமாகும் மத்திய அரசு.. 'முதல் முறையாக' அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு நாளை அழைப்பு
Recommended Video
டெல்லி: காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் துணை ராணுவப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஆவேசமாக அறிவித்துள்ளார்.
நாளையே ஆலோசனை
இந்த நிலையில் நாடாளுமன்ற நூலக வளாகத்தில் வைத்து நாளை காலை 11 மணிக்கு, அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
முக்கியமான கூட்டம்
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை பெறுவதற்காக நடத்தப்படும், முதலாவது, அனைத்து கட்சி கூட்டம் இதுதான் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தின் ஊரி பகுதியில் ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம், துல்லிய தாக்குதல் நடத்தியது.
முதல் முறை
தாக்குதல் நடத்தப்பட்ட மறுதினம் அனைத்து கட்சி தலைவர்களை அழைத்து மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் முதல் முறையாக, அனைத்து கட்சிகளின் ஆலோசனையை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சியை மோடி அரசு இப்போது எடுத்துள்ளது. பாகிஸ்தானிற்கு எதிராகவும், தீவிரவாதிகளுக்கு எதிராகவும் எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி ஆதரவு
தீவிரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு, காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி, அரசியல் செய்யாது என்று அக்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இன்று காலை அறிவித்திருந்த நிலையில், அனைத்து கட்சிகளின் கருத்தை கேட்டு மத்திய அரசு எந்த மாதிரியான அதிரடி நடவடிக்கைகளில் இறங்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.