மோடி அலையெல்லாம் இல்ல.. இது சுனாமி! எதிர்க்கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்திய வாரணாசி ரோடு ஷோ
Recommended Video
டெல்லி: உத்தர பிரதேசத்தில் பல லட்சம் தொண்டர்கள் புடை சூழ பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ரோடு ஷோ, எதிர்க்கட்சிகள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் நரேந்திர மோடி, நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இதையொட்டி, இன்று மாலை சுமார் 5 மணியளவில் மதன் மோகன் மால்வியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ரோடு ஷோ ஆரம்பித்தார் நரேந்திர மோடி.
திறந்த வாகனத்தில் நின்றபடியே மோடி பயணிக்க, திரும்பிய பக்கமெல்லாம் காவி கொடிகளும், காவி ஆடை அணிந்த தொண்டர்களும் மட்டுமே. எங்கெங்கு நோக்கிலும், மோடி.. மோடி என்ற கோஷம்தான்.
என்னா கூட்டம்.. பல லட்சம் பேராவது இருப்பார்கள்.. வாரணாசியில் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு
மக்கள் கூட்டம்
சுமார் 6 லட்சம் பேர் 6 கி.மீ தூரத்திற்கும் நின்று மலர் தூவி வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தின் வெளியே உள்ள மதன் மோகன் மால்வியா சிலையில் ஆரம்பித்த ரோடு ஷோ, கங்கை நதி தீரம் வரை நடைபெற்றது. மோடியை பார்க்க வழிநெடுகிலும் மாடிகளிலும் மக்கள் ஏறி நின்றனர். அங்கிருந்தபடியே மோடியை பார்த்து கையசைத்தனர்.
மோடி சுனாமி
இந்த நிகழ்வை படம் பிடிக்க வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களும் வாரணாசியில் குவிந்திருந்தனர். மொத்தத்தில் மோடி அலை மட்டுமல்ல, ஒரு சுனாமியையே உருவாக்கிவிட்டார். இதுவரை 3 கட்ட லோக்சபா தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. அதில் பாஜக வலுவாக உள்ள உத்தர பிரதேசத்திலுள்ள தொகுதிகளில் இனிதான் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, பாஜக தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், மக்களுக்கு மோடி மீதான ஈர்பபையும் அதிகரிக்க உதவும் என்பதே இந்த பிரமாண்ட ரோடு ஷோவின் பின்னணி காரணமாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகள்
கடந்த முறை, வாரணாசியில் மோடி 56 சதவீத வாக்குகளை ஈர்த்தார். ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அரவிந்த் கேஜ்ரிவால் 20 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 7.3 சதவீதம், பகுஜன் சமாஜ் 6, சமாஜ்வாதி 4 சதவீத வாக்குகளை பெற்றன. இம்முறை, எதிர்க்கட்சிகள் இணைந்து வலுவாக காணப்படுவதால், மோடியும், தனது பலத்தை காண்பிக்க இந்த ரோடுஷோவை பயன்படுத்திக் கொண்டார்.
பாஜகவுக்கு ஆதாயம்
இதன் தாக்கம் உத்தர பிரதேசம், அண்டையிலுள்ள பீகார் வரை எதிரொலிக்கும். அனைத்து டிவி சேனல்களும் மோடி ரோடு ஷோவை லைவாக காண்பித்ததன் விளைவாக, மோடிக்கான ஆதரவு அலை நாடு முழுக்க கவனிக்கப்பட்டு, அது பாஜகவுக்கு பூஸ்ட் கொடுக்கும் என எதிர்பார்க்கிறது அந்த கட்சி.