ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது- பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது என பிரதமர் நரேந்திர மோடி நிதி ஆயோக் கூட்டத்தில் பேசினார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 5-ஆவது நிதி ஆயோக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். எனினும் மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ், அமரீந்தர் சிங் ஆகியோர் பங்கேற்கவில்லை.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் விவசாய நலத்திட்டங்கள் குறிப்பிட்ட நேரத்தில் விவசாயிகளை சென்று சேர வேண்டும்.
ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சி ஆகியவற்றை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது. 2024-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதே லட்சியம்.
இந்த சவாலை மாநிலங்களின் முயற்சியால் மட்டுமே எட்டமுடியும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜலசக்தி துறை அமைச்சகம் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினையில் உதவும். 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க வேண்டும்.
2024-ஆம் ஆண்டுக்குள் குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.