பவுத்தம் அகிம்சையையும், அமைதியையும் போதிக்கிறது.. சீனாவுக்கு குட்டு வைத்த மோடி பேச்சு
டெல்லி: மிகப்பெரும் சவால்களுக்கு நீடித்த தீர்வானது புத்தரின் கோட்பாடுகளிலிருந்து வரலாம் என பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார். மேலும் பவுத்த மதம், அமைதியையும், அகிம்சையையும் போதிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று ஆஷாட பூர்ணிமா அதாவது புத்த பூர்ணிமா நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி புத்தரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து. குடியரசு தலைவர் மாளிகையில் சர்வதேச புத்த மாநாட்டு என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தர்ம சக்ர தினத்தில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசினார். இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் கலந்து கொண்டார்.
காணொலி காட்சி மூலம் பேசுகையில் கூறுகையில் சீனாவுக்கு மறைமுகமாக குட்டு வைக்க தவறவில்லை.
திடீர் லடாக் விசிட்.. ஸ்கோர் செய்த மோடி.. ஜிங்பிங்கிற்கு எதிராக கொதிக்கும் சீன மக்கள்.. திருப்பம்!
புத்தர் கோட்பாடுகளில் தீர்வு
இன்றைய தினம் உலகம் மிகப் பெரும் சவால்களுடன் போராடி வருகிறது. இந்த சவால்களுக்கு புத்தரின் கோட்பாடுகளிலிருந்து நீடித்த தீர்வு கிடைக்கலாம். புத்தரின் கோட்பாடுகள் கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் மிகவும் பொருத்தமாக இருந்தது. அது போல் அவை எதிர்காலத்திலும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். புத்தரின் கோட்பாடுகளையும் எண்ணங்களையும் இளைஞர்கள் தங்கள் மனதில் நிறுத்த வேண்டும்.
சாந்தப்படுத்தும்
அவரது கோட்பாடுகள் ஊக்கத்தை அளிக்கும். ஒருவரை சாந்தப்படுத்த முடியும். மேலும் நல்வழியையும் காட்டும். உலகளாவிய பிரச்சினைகளுக்கு பிரகாசமான இளைஞர்கள் தீர்வு கண்டு வருகிறார்கள். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மிகப் பெரிய சூழல்கள் இந்தியாவில் உள்ளன.
புத்த தலங்கள்
புத்த தலங்களை இணைக்க நாம் கவனம் செலுத்த வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் குஷிநகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. இதன் மூலம் புத்த தலங்களுக்கு ஏராளமான மக்களையும், யாத்ரீகர்களையும் சுற்றுலா பயணிகளையும் வரவழைக்கும்.
சீனாவுக்கு குட்டு?
பவுத்தம், ஏழைகள், பெண்கள், அமைதி மற்றும் அகிம்சை ஆகியவற்றை மதிக்கிறது. இரக்கம் மற்றும் தயவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது என்று பிரதமர் மோடி கூறினார், மேலும் புத்தரின் போதனைகள் "சிந்தனையிலும் செயலிலும் எளிமையைக் கொண்டாடுகின்றன" என்றும் கூறினார்.
சாரநாத்தில் அவர் மேற்கொண்ட முதல் பிரசங்கத்திலும், அதன் பின்னர் அவர் கற்பித்த போதனைகளிலும், புத்தர் நம்பிக்கை மற்றும் குறிக்கோள் என்ற இரண்டு விஷயங்களைப் பற்றி பேசினார். அவற்றுக்கு இடையே ஒரு வலுவான தொடர்பைக் கண்டார். இவ்வாறு பேசினார் மோடி. இந்திய எல்லையை ஆக்கிரமிக்க சீனா முயல்கிறது, 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்புக்கு காரணமாக இருந்துள்ளது. இத்தனைக்கும் அகிம்சையை போதிக்கும் புத்த மதத்தை பெருவாரியாக பின்பற்றும் நாடுதான் சீனா. இந்த நிலையில்தான், அகிம்சை குறித்து, தனது பேச்சில் மோடி வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.