அடடா, பிரதமர் மோடியா இது.. பவ்யமாக ஆளே மாறிப்போய்.. பத்திரிக்கையாளர்களுக்கே ஆச்சரியம்!
டெல்லி: அடடா, இது நம்ம மோடிதானா என்று ஆச்சரியத்தில் உள்ளனர் அவரின் கடந்த இரு நாட்கள் பேட்டிகளை பார்த்த, பொதுமக்கள்.
7 கட்ட லோக்சபா தேர்தல்களில் எஞ்சியிருப்பது இன்னும் 2 கட்ட தேர்தல்கள்தான். இந்த நிலையில் தொங்கு லோக்சபாதான் அமையும் வாய்ப்பு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேச்சு அதிகரித்துள்ளது.
இப்படியான ஒரு சூழ்நிலையில்தான், பிரதமர் மோடியின் செயல்பாடுகளில் ஏகப்பட்ட மாற்றங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை திடீரென புகழ்ந்ததை கூட அரசியல் மரியாதை என்று விட்டுவிடலாம், ஆனால், இதுவரை செய்யாததையெல்லாம் செய்ய தொடங்கியுள்ளார் மோடி.
பேட்டிகள் இல்லை
ஆம்.. பதவியேற்றதில் இருந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளிக்காதவர் என்ற விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தவர்தான் மோடி. இந்த விஷயத்தில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், ஏறத்தாழ மோடி போலத்தான். பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதை பெரும்பாலும் தவிர்த்துவிடுவார்.
ஒருவழிப் பாதைகள்தான்
ஜெயலலிதா தேர்தல் காலங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலே போதும். அல்லது பத்திரிக்கைகளில் அறிக்கைகளை வெளியிட்டு தகவல்களை சொல்வது அல்லது குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுப்பதே போதுமானது என நினைத்தவர். மோடியை பொறுத்தளவில், ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளங்களில், தான் கூற வந்த தகவல்களை வெளியிடுவார். மன் கி பாத் போன்ற நிகழ்ச்சிகளின் மூலமாக, மக்களிடம் பேசி வந்தார். ஆனால், இவை அனைத்துமே ஒன்வே பாதை போல, ஒரு வழியானவை. மறு கேள்விக்கோ, உரையாடலுக்கோ இங்கு வழியே இல்லை.
அடுத்தடுத்து பேட்டிகள்
ஆனால், இப்போது நிலைமை தலைகீழாகியுள்ளது. 5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், இப்போது திடீரென, அடுத்தடுத்து, ஆங்கில செய்தி ஊடகங்களுக்கு தனித்தனியாக பேட்டி கொடுத்து வருகிறார் மோடி. நேற்று டெல்லியில் டைம்ஸ்நவ் டிவி சேனலுக்கு, பிரச்சார கூட்டத்திற்கு நடுவே, மோடி பேட்டியளித்தபோது, அவருடன் யாரும் நிற்க கூட இல்லை. ஒரு சாமானிய பாஜக நிர்வாகி எப்படி செய்தியாளர்களை சந்தித்து பேசுவாரோ அந்த தொனியில் பேசினார், அந்த ஸ்டைலில்தான் நின்றபடியே பேட்டியளித்தார் மோடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
திடீர் மாற்றம்
இந்தியா டுடே டிவி சேனல், ஜி டிவி, இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் என மோடி சிறப்பு பேட்டியளிக்கக்கூடிய ஊடகங்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அடுத்த இரு கட்ட தேர்தலிலும் கூடுதல் இடங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கம்தான், மோடியின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஒருவேளை கூட்டணிக்கு வேறு பல கட்சிகள் தயவு தேவைப்படும் நிலை வந்தால் மோடியின் இந்த பவ்யம், அந்த கட்சி தலைவர்களுக்கு திருப்தியை கொடுத்து பாஜகவுக்கு ஆதரவை ஈட்டித் தரும் என்ற கணக்கும் இருக்கலாம் என்கிறார்கள் சிலர். எது எப்படியோ, மாற்றம் தொடர்ந்தால் நாட்டுக்கு நல்லதே!