மீண்டும் பிரதமரானார் மோடி.. உலகத் தலைவர்கள் முன்னிலையில் பதவியேற்பு
Recommended Video
டெல்லி: நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இன்று மீண்டும் பதவியேற்றார். மோடியுடன் அவரது அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது. பிரதமராக பதவியேற்ற மோடிக்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாட்டின் 17வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 23 ஆம் தேதி வெளியானது.
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களை அள்ளியுள்ளது. பாஜக மட்டும் தனித்து 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.
மீண்டும் பாஜக
இந்த மாபெரும் வெற்றியை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியமைக்கிறது பாஜக.
முதல்முறை
பாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று பதவி ஏற்றுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் அல்லாத கட்சியை சேர்ந்தவர் ஒருவர் இரண்டாவது முறையாக பிரதமர் ஆவது இதுவே முதல் முறையாகும்.
பதவிப்பிரமாணம்
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். மோடியுடன் அவரது அமைச்சரவையும் இன்று பதவி ஏற்கிறது.
பல்வேறு நாட்டு தலைவர்கள்
மோடியின் பதவியேற்பு விழாவில் நேபாளம், மொரிஷியஸ், மற்றும் பூட்டான் ஆகிய அண்டை நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்றனர். தாய்லாந்தில் இருந்து சிறப்பு பிரதிநிதி பங்கேற்றார். இதேபோல் வங்கதேசம், இலங்கை, மியான்மர், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்களும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
அமைச்சரானார் அமித்ஷா
மோடியின் அமைச்சரவையில் பாஜகவின் மூத்த தலைவர்களுக்கும், கடந்த முறை அமைச்சர் பதவியில் இருந்தவர்களும் பல புது முகங்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய தலைவரான அமித் ஷாவும் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.