டெல்லி கலவரம் பின்னணியில் பாஜக! ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றதும்.. சாட்டை எடுத்த கார்கே
டெல்லி: ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பதவி காலம் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு மல்லிகார்ஜுன கார்கே அளித்துள்ள சிறப்பு பேட்டியின் முக்கிய அம்சங்களை இதோ பாருங்கள்:
எதிர்க்கட்சித் தலைவராக இருப்பது எனக்கு புதிது கிடையாது. கர்நாடக சட்டசபையில் 11 வருடங்கள் எதிர்கட்சி தலைவராக இருந்துள்ளேன். இரவு முழுக்க சட்டசபைக்குள் அமர்ந்து போராட்டம் நடத்திய அனுபவம் கூட இருக்கிறது. லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் தலைமை எனக்கு வழங்கியது. நான் ஒரு வட இந்தியர் கிடையாது என்பதால் அந்த பதவியின் மீது எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. ஏனென்றால் அது ஒரு சவாலான பதவி. ஒட்டுமொத்த அரசும் உங்கள் மீது தான் கோபத்தை காட்டும்.
2018ஆம் ஆண்டு லோக்சபாவில் அரசுக்கு எதிராக நான் பேசிய பேச்சையடுத்து, என்னை தோற்கடித்துவிட வேண்டும் என்று மோடி சபதம் எடுத்தார். இந்த நிலையில்தான் 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது நான் தோல்வி அடைந்தேன். 11 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற நான், அந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டேன்.
லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரண்டிலும் ஏறத்தாழ பொறுப்புகள் ஒன்று தான். ஆனால் குலாம்நபி ஆசாத், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது காங்கிரஸ் உறுப்பினர்கள் பலம் 72 என்ற அளவில் இருந்தது. ஆனால் அது இப்போது குறைந்து 35 உறுப்பினர்களாக உள்ளனர். எனவே கண்டிப்பாக வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். 72 பேர்ர உங்களுக்கு ஆதரவாக சேர்ந்து நிற்பதற்கும் 35 பேர் ஆதரவளிப்பதற்கு வித்தியாசம் இருக்கிறது. அதிக பெரும்பான்மை இருக்கும் போது காங்கிரஸ் நினைத்தால் எந்த ஒரு சட்டத்தையும் ராஜ்யசபாவில் நிறுத்திவிட முடியும். இப்போது பிற கட்சிகளின் ஒத்துழைப்போடு தான் அதைச் செய்ய முடியும்.
நான் காங்கிரஸ் கட்சியில் 55 வருடங்களாக இருக்கிறேன். எனவே ஆலோசனைக் கூட்டங்களிலும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அறிவுரை கூறுவதற்கு அனைத்து தகுதியும் எனக்கு இருக்கிறது. சுமார் 20 அல்லது 20 வருடங்களாக காங்கிரஸில் இருந்து அனைத்து வாய்ப்பு வசதிகளையும் அனுபவித்துவிட்டு சமீபத்தில் பாஜகவில் சேர்ந்துகொண்டு, நேரு மற்றும் இந்திரா காந்தியை விமர்சனம் செய்கிறார்கள். எப்படி இவர்களால் கொள்கையை மாற்றிக் கொள்ள முடிகிறது? காங்கிரஸ் கட்சியின் கொள்கையை எடுத்துச் சொல்வது அவசியம் என்று நினைக்கிறேன்.
2019ஆம் ஆண்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் போது விவசாய சட்டங்களை கொண்டு வருவோம் என்று கூறியதாகவும், இப்போது அதை எதிர்ப்பதாகவும் பாஜக குற்றம் சாட்டுகிறது. ஆனால் எங்களது தேர்தல் அறிக்கையை சரியாக வாசிக்க வேண்டும். எந்த மாதிரியான சீர் திருத்தம் பற்றி நாங்கள் அதில் பேசி இருக்கிறோம் என்பது முக்கியம். அதானி அனைத்து குடோன்களையும் கட்டிக்கொண்டு அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொள்வார் என்று நாங்கள் குறிப்பிட்டுள்ளோமா? சீர்திருத்தம் தேவைதான் ஆனால் விவசாயிகளை ஒடுக்கும் வகையில் அது இருக்கக் கூடாது.
சிறிய விவசாயிகள் பெருநிறுவனங்களுக்கு தங்களது நிலங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று நாங்கள் சீர்திருத்தம் கொண்டுவர போகிறோம் என்று நாங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோமா? இந்தியாவில் சுமார் 86 சதவீதம் விவசாயிகள் 2 ஹெக்டேர் நிலப்பரப்பின் கீழே வைத்திருக்க கூடிய சிறு மற்றும் குறு விவசாயிகள்தான். ஆனால் அவர்கள் தேவையான அளவுக்கு உணவு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி இருக்கும்போது ஒப்பந்த விவசாயம் எதற்கு?
தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை அடுத்த சில ஆண்டுகளில் மீறி விட்டால் என்ன செய்ய முடியும்?
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவு தானியங்களில் சுமார் 80% அளவுக்கான தானியங்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. இவை பாதிக்கப்பட்டால் நாடு முழுக்க ஒட்டுமொத்த பொது வினியோக சிஸ்டம் பாதிக்கப்படும். 3 வேளாண் சட்டங்களில் குறைபாடுகள் இருப்பதால் தான் 90 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை மனதில் வைத்துதான் பாஜக ஜனவரி 26 ஆம் தேதி கலவரத்தை உண்டு செய்து விவசாயிகள் மத்தியில் பிளவை ஏற்படுத்த முயன்றது.
விவசாயிகளில் ஒரு குழுவை உருவாக்கி அவர்கள் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற மாய தோற்றத்தை உருவாக்கினர். விவசாயிகளை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று அழைத்தனர். வெளிநாட்டு சதி இருப்பதாக குற்றஞ்சாட்டினர். ஆனால் டெல்லி எல்லையில், போராடக்கூடிய விவசாயிகள் அனைவரும் நன்கு படித்த கல்வி அறிவு பெற்ற விவசாயிகள். யாரும் அவர்களை கைப்பாவையாக பயன்படுத்தி விட முடியாது. இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.