புல்வாமா தாக்குதலின்போது.. டீ, சமோசாவுடன் இமயமலையில் ஷூட்டிங்கில் இருந்தார் மோடி- காங்கிரஸ்
டெல்லி: புல்வாமா தாக்குதல் நடந்த போது ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் ஷூட்டிங்கில் இருந்தார் பிரதமர் நரேந்திர மோடி என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் 70-க்கும் மேற்பட்ட கான்வாய் வாகனங்களில் ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் 2500க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கடந்த வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனர். அப்போது தற்கொலை படை பிரிவை சேர்ந்த தீவிரவாதி வெடிப்பொருள் இருந்த காருடன் வீரர்களின் வாகனத்தில் மோதியதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகிவிட்டனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களும் இதை தன் வீட்டு துக்கமாக கருதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி
இந்த நிலையில் புல்வாமா தாக்குதல் நடந்த போது இமயமலையில் இருந்த மோடிக்கு புல்வாமா தாக்குதல் நடந்தது தெரிந்தும் அவர் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தார் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
பிரதமர் மோடி
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில் புல்வாமா தாக்குதல் கடந்த வியாழக்கிழமை (பிப் 21) நடந்த போது நேரம் மதியம் 3.10 இருக்கும். அந்த நேரத்தில் ஜிம் கார்பெட் பூங்காவில் இருந்த பிரதமர் மோடி மாலை 6.30 மணி வரை இருந்தார்.
பிஸி
பின்னர் தன்கார்ஹி கேட் வழியாக அவர் வெளியே வந்த போது 6.40 மணியாக இருந்தது. புல்வாமா தாக்குதல் குறித்து தெரிந்திருந்தும் அவர் எந்த வித அறிக்கையையும் விடவில்லை. புல்வாமா தாக்குதலில் வீரர்களை இழந்து நாடே சோகத்தில் மூழ்கியிருக்கும் போது முதலைகளுக்கு மத்தியில் ஆவணப்படத்துக்கான ஷூட்டிங்கில் மோடி பிஸியாக இருந்துள்ளார்.
மௌனம்
இது போன்ற பிரதமர் உலகில் வேறெங்காவது பார்த்திருப்போமா. இதையடுத்து ராம்நகர் பொதுப் பணித் துறை விருந்தினர் மாளிகைக்கு இரவு 7.10 மணிக்கு வந்த மோடி அங்கு டீ, சமோசாவை சாப்பிட்டுள்ளார். ஆக சம்பவம் நடந்த 4 மணி நேரமாக அவர் மௌனம் காத்துள்ளார் என்று குற்றம்சாட்டினார்.