தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை
டெல்லி: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பிரதமர் மோடி மற்றும் அனைத்து மாநில முதல்வர்களும் அவ்வப்போது ஆலோசனைகள் நடத்துகிறார்கள்.
தற்போதைய நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. முதலில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லியில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. தற்போது டெல்லியில் அம்மாநில கெஜ்ரிவால் அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கைகளால், நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மேலும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் நாள்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணிக்கு ஆலோசனையை துவக்கியுள்ளார். முதல்வரோடு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.
கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்திர பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, குஜராத், பீகார் மாநில முதல்வர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.