72-வது குடியரசு தினம்:டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றினார்- கண்கவர் அணிவகுப்பு
டெல்லி: நமது தேசத்தின் 72-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடனும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ராஜபாதையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றினார். பின்னர் முப்படை அணிவகுப்பு, மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது.
டெல்லி ராஜபாதையில் இன்று தேசத்தின் 72-வது குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ராஜபாதைக்கு வருகை தந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி வரவேற்றார். முன்னதாக ஜனாதிபதி மாளிகையில் இருந்து குதிரைப்படை அணிவகுப்புடன் ஜனாதிபதி ராம்நாத் அழைத்து வரப்பட்டார்.
அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றினார். அதைத் தொடர்ந்து முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.
பின்னர் ராணுவ வலிமை, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையிலான அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன.
17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், பல்வேறு அமைச்சகங்கள்/துறைகளில் இருந்து ஒன்பது அலங்கார ஊர்திகள், பாதுகாப்பு அமைச்கத்தின் ஆறு அலங்கார ஊர்திகள் ஆகியவை நாட்டின் கலாச்சார பாரம்பரியம், பொருளாதார வளர்ச்சி மற்றும் ராணுவ வலிமை ஆகியவற்றை பறைசாற்றின.
இந்த முறை முதல் முறையாக லடாக் யூனியன் பிரதேசத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி இடம்பெற்றது. மாமல்லபுர கட்டிடக் கலையை பறைசாற்றும் வகையில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி இடம்பெற்றது.
முன்னதாக நாட்டுக்காக தங்கள் இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.