இது சட்ட விரோதம்.. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் உமர் அப்துல்லா கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
டெல்லி: ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதற்கும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிராக தேசிய மாநாடு கட்சி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அக் கட்சி எம்.பி.க்கள் அக்பர் லோன் மற்றும் ஹஸ்னைன் மசூதி ஆகியோர் தாக்கல் செய்துள்ள தனது மனுவில், மத்திய அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு அரசியலமைப்பின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜம்மு-காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் பெறாமல், சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கான ஜனாதிபதி உத்தரவு அரசியலமைப்பு ரீதியாக செல்லாது என்றும், தேசிய மாநாடு கட்சியின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்லது.
அமைச்சரவை ஆலோசனையின்பேரில் குடியரசு தலைவர் இப்படி ஒரு முடிவை எடுக்க முடியாது. இது, தன்னிச்சையானது மற்றும் சட்ட விதிக்கு முரணானது.
ஜம்மு-காஷ்மீர் (மறுசீரமைப்பு) சட்டம், 2019 - இதன் கீழ் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பது அரசியலமைப்பு ரீதியாக செல்லாது. அரசியலமைப்பு சட்டம், ஒரு மாநிலத்தை, யூனியன் பிரதேசம் போன்ற குறைந்த பிரதிநிதித்துவ வடிவத்திற்கு பின்னோக்கி தரமிறக்க நாடாளுமன்றத்திற்கு அனுமதிதரவில்லை, என்று அந்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உமர் அப்துல்லா மற்றும் மற்றொரு முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி மற்றும் நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்கள் காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை பராமரிக்க வழக்கமான படை வீரர்களைவிட கூடுதலாக 50,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.