சோனியா, ராகுல் ரிட் மனுக்கள் தள்ளுபடி.. நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தை காலி செய்ய டெல்லி கோர்ட் உத்தரவு
டெல்லி: நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தை 2 வாரத்தில் காலி செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'நேஷனல் ஹெரால்டு' என்ற பத்திரிகையை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கடந்த 1938-ம் ஆண்டு தொடங்கினார். அந்த பத்திரிகை 2008-ம் ஆண்டு மூடப்பட்டது. இதனையடுத்து, அந்த பத்திரிகையின் வெளியீட்டு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை யங் இந்தியா நிறுவனம் வாங்கியதில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை சோனியாவும் ராகுல் காந்தியும் முறைகேடாக பயன்படுத்துவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார்.
இந்தநிலையில், நேஷனல் ஹெரால்டு அலுவலகம் அமைந்துள்ள கட்டிடம் கடந்த 10 ஆண்டுகளாக வணிகநோக்கில் பயன்படுத்துவதாக மத்திய நிலம் மற்றும் அபிவிருத்தி அலுவலகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் சோனியா, ராகுல் ஆகியோரின் ரிட் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், 2 வாரத்தில் ஹெரால்டு அலுவலகத்தை காலி செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.